ETV Bharat / bharat

லைஃப் மிஷன் ஊழல் வழக்கு: முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலருக்குத் தொடர்பு!

author img

By

Published : Nov 2, 2020, 3:18 PM IST

திருவனந்தபுரம்: லைஃப் மிஷன் ஊழல் வழக்கின் ஐந்தாவது குற்றவாளியாக முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் எம். சிவசங்கரின் பெயரை வருமான வரித் துறை மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளன.

ker
ker

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது. இதுதொடர்பான என்ஐஏ விசாரணையில், கேரள தகவல் தொழில் நுட்பத் துறையில் அலுவலராகப் பணிபுரிந்த ஸ்வப்னா, அவரது நண்பர் சந்தீப் நாயர், சரீத்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இதையடுத்து, களத்திலிறங்கிய அமலாக்கத் துறையினர், ஸ்வப்னாவுக்கு பல வங்கிகளில் கணக்கு மற்றும் லாக்கர் இருப்பதைக் கண்டறிந்தனர். அந்த லாக்கர்களில் கோடிக்கணக்கான பணம், நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அமலாக்கத் துறையின் அதிரடி விசாரணையில் ஸ்வப்னாவிற்கு கேரளாவில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதே வங்கியில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் கணக்கும் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அந்த வங்கியின் மேலாளரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பணம் எப்படி வந்தது என விசாரித்தபோது, `கேரள அரசின் 'லைஃப் மிஷன்' என்னும் வீடு கட்டும் திட்டத்தில் ஒப்பந்ததாரரிடமிருந்து கமிஷனாகப் பெற்ற தொகை என அதிரவைத்திருக்கிறார் ஸ்வப்னா.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சேர்மனாக இருக்கும் `லைஃப் மிஷன்' திட்டத்தில், கடந்த மார்ச் மாதம் இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 262 வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டன. மேலும், ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கின்றன. சுமார் 18.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அந்த ஒப்பந்தத்தை `யுனிடாக்’ என்ற நிறுவனம் எடுத்திருக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தத்தைப் பெற ஸ்வப்னா உள்பட பல அரசு ஊழியர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வருமானவரித் துறை மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், இந்த ஊழலின் ஐந்தாவது குற்றவாளியாக முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் எம். சிவசங்கரின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.

யூனிடாக் எம்.டி. சந்தோஷ் ஈபன் சிவசங்கருக்கு ஐபோன் வழங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. சிவசங்கரிடம் விரைவில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.