ETV Bharat / bharat

Gyanvapi Case : தொல்லியல் துறை ஆய்வுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் அதிரடி!

author img

By

Published : Jul 24, 2023, 3:45 PM IST

Updated : Jul 24, 2023, 4:04 PM IST

Gyanvapi Case : ஞானவாபி உயர் நீதிமன்றத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Gyanvapi
Gyanvapi

டெல்லி : ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சி நடத்த ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது. இந்த மசூதியை அஞ்சுமன் இன்டெஜாமியா குழு நிர்வகித்து வருகிறது. இந்த மசூதியின் வளாகத்தில் சிரிங்கர் கவுரி சன்னதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்கள் சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கவுரி சன்னதிக்கு தினமும் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி, 5 பெண்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு மசூதி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆய்வு முடிவில் மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற பொருள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த மசூதி நிர்வாகம், தொழுகைக்கு வருபவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட நீரூற்று என்றும் சிவலிங்கம் இல்லை என்றும் முறையிட்டது. இதையடுத்து மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று (ஜூலை. 24) ஞானவாபி மசூதி அமைந்து இருக்கும் இடத்திற்கு வந்த இந்திய தொல்லியல் துறையினர், அய்வு நடத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த இடைக்கால தடை விதித்தனர். மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மசூதி நிர்வாகம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையிட ஏதுவாக ஜூலை 26ஆம் தேதி வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் அறிவியல் ரீதியான ஆய்வை துவக்கியது இந்திய தொல்லியல் துறை!

Last Updated : Jul 24, 2023, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.