ETV Bharat / bharat

ராமன் கோயிலில் முஸ்லீம்கள் வேலை பார்ப்பதா? - சர்ச்சையாகும் ஸ்ரீராம் சேனாவின் கோரிக்கை

author img

By

Published : Aug 2, 2023, 8:36 PM IST

அயோத்தி ராமர் கோயில் பணிகளில் இருந்து முஸ்லீம் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஸ்ரீராம் சேனாவின் தேசிய தலைவரான பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லீம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்ரீராம் சேனா
முஸ்லீம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்ரீராம் சேனா

பெங்களூரு: நூற்றாண்டு காலப் பிரச்னையாக பார்க்கப்பட்ட பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோயில் கட்டுமானம் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பல்வேறு போராட்டங்களைக் கடந்து, 2019ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டத் தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பிரதமர் மோடி இந்த கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் தொழில்நுட்பங்களுடன் சிறப்பான கலைநயம் நிறைந்து பிரமிக்க வைக்கும் வகையில் தயாராகும் ராமர் கோயில், இந்த ஆண்டு இறுதியில் முதல் தளம் நிறைவு செய்யப்பட்டு 2024ஆம் ஆண்டு கோயில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சர்ச்சைக்கு பெயர் போனது என்ற வரிசையில், இருக்கும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கும் நேரத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீராம் சேனாவின் தேசிய தலைவரான பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரமோத் முத்தாலிக், “அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் பின்னால் ஆயிரக்கணக்கான இந்துக்களின் தியாகம் மற்றும் அவர்களின் பிரார்த்தனை நிறைந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் பலர் இன்றளவிலும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் பாபர் மசூதி கட்டவும் இஸ்லாமியர்கள் தயாராக உள்ளனர்.

அதனால் புனிதத் தன்மைகொண்ட ராமர் கோயில் பணிகளில் இத்தகைய வக்கிர நோக்கம் உடையவர்களை அனுமதிப்பது முறையற்ற செயலாகும். அதனைத் தவிர்த்து இந்த புனிதச் செயலுக்கு உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான இந்துக்களின் தியாகத்தை அவமதிக்கப்படும் செயலாகும்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளையின் உறுப்பினரான கர்நாடகாவில் உள்ள பெஜாவர் மடத்தின் விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமியிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “சிற்பக்கலை நயங்கள் இந்தியாவின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. இந்த பணிகளுக்கு இஸ்லாமியர்களை நியமிப்பது என்பது காலம்காலமாக சிற்பக்கலையில் ஈடுபட்டு வரும் விஸ்வகர்மா சமூகத்திற்கு அவமானமாகும்.

அதனால் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில், ஜியா உல் உஸ்மானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தது நாடு முழுவதும் அனைவரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

இதையும் படிங்க: Super Moon : வானில் ஜொலித்த சூப்பர் மூன்! போட்டோ எடுத்து மக்கள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.