ETV Bharat / bharat

தேர்வுக்கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

author img

By

Published : Nov 17, 2020, 3:18 PM IST

டெல்லி : நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தள்ளுபடி செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

தேர்வுக்கட்டணத்தை தள்ளுபடிச் செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
தேர்வுக்கட்டணத்தை தள்ளுபடிச் செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

'சோஷியல் ஜூரிஸ்ட்' என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவரும், கல்வி ஆர்வலருமான அசோக் அகர்வால் என்பவர் தேர்வுக்கட்டணம் தொடர்பான டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "2019-2020ஆம் கல்வியாண்டில், டெல்லி அரசு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தியது. ஆனால், இந்த கல்வியாண்டில் (2020-2021) நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அவ்வாறு செய்ய மறுத்துவிட்டது.

2018-2019ஆம் கல்வியாண்டு வரை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணம் பெயரளவிலேயே இருந்தது. ஆனால் 2019-2020ஆம் ஆண்டில், சிபிஎஸ்இ நிர்வாகம் தேர்வுக் கட்டணத்தை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

நடப்பு 2020-2021ஆம் கல்வியாண்டில், சிபிஎஸ்இ நிர்வாகம் 10ஆம் வகுப்பு மாணவர்களிடமிருந்து ரூ.1,500 முதல் ரூ.1,800 வரையிலும், 12ஆம் வகுப்பு மாணவர்களிடமிருந்து ரூ.1,500 முதல் ரூ.2,400 வரையிலும் தேர்வுக் கட்டணத்தை கோரியுள்ளது.

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பல கோடி மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பெரும் நெருக்கடியின் காரணமாக பல பெற்றோர்கள் தங்களது வருமானத்தை முற்றுமுழுதாக இழந்துவிட்டனர்.

எனவே, அவர்களால் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வுக் கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், மாணவர்களின் கட்டணத்தை பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து வழங்க மத்திய அரசுக்கு ஆணையிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா ஆகிய மூவர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் விளைவாக நாட்டில் 30 லட்சம் மாணவர்களுக்கு நிவாரணம் மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் மூன்று லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, நாட்டின் எதிர்காலமான மாணவச்செல்வங்களின் கல்வியைக் கருத்தில்கொண்டு தேர்வுக்கட்டணம் தொடர்பான நல்லதொரு உத்தரவையிட வேண்டும்" என வாதிட்டார்.

டெல்லி அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், "இந்தக் கல்வியாண்டில், மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியாத அளவு யூனியன் பிரதேச அரசு கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. கடந்த ஆண்டு செய்ததைப் போல, மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பில்லை" எனக் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இது தொடர்பாக சட்டத்திற்குப் பொருத்தமான ஒழுங்குமுறை விதிகளின்படி, கல்விக் கொள்கைக்கு ஏற்ப ஒரு முடிவை எடுக்குமாறு அரசை வலியுறுத்துகிறோம்.

இது தொடர்பான முடிவை மூன்று வாரங்களுக்குள் மத்திய அரசும், சிபிஎஸ்இ நிர்வாகமும் அறிவிக்க வேண்டும் எனக் கூறி தன்னார்வ தொண்டு நிறுவனமான சோஷியல் ஜூரிஸ்ட தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.