ETV Bharat / bharat

அதிருப்தியுடன் நிறைவடைந்த இந்தியா - சீனா ராணுவப் பேச்சுவார்த்தை

author img

By

Published : Oct 11, 2021, 5:14 PM IST

இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது சீனாவின் தரப்பு முரண்டு பிடித்ததன் காரணமாக இந்தியா - சீனா ராணுவப் பேச்சுவார்த்தை அதிருப்தியில் நிறைவடைந்தது.

இந்தியா - சீனா ராணுவப் பேச்சுவார்த்தை
இந்தியா - சீனா ராணுவப் பேச்சுவார்த்தை

இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்களின் 13வது கூட்டம், சுசூல் - மோல்டோ எல்லையில் நேற்று (அக்.10) நடந்தது. இந்தக் கூட்டத்தில் கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லைப் பகுதியில் ஏற்கனவே இருந்த நிலைப்பாட்டை சீன தரப்பினரின் தன்னிச்சையாக மாற்ற முயன்றதாலும், இருதரப்பு ஒப்பந்தங்களை மீறியதாலும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பிரச்சினை எழுந்ததாக இந்திய தரப்பினர் சுட்டிக் காட்டினர்.

ஆகையால் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் மேற்குப் பகுதியில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த சீன ராணுவத்தினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். துஷான்பே நகரில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் எல்லையில் மீதமுள்ள பிரச்னைகளைத் தீர்க்க ஒப்புக் கொண்டனர்.

அவர்களின் வழிகாட்டுதலின் படி பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்படும் என இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பிரச்சினைகளைத் தீர்க்க ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை இந்தியத் தரப்பு வழங்கியது.

ஆனால் இதற்கு சீனத் தரப்பினர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களால் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வழங்க முடியவில்லை. அதனால் இந்தக் கூட்டத்தில் எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படவில்லை" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய பேச்சுவார்த்தைகள் 16 மணிநேரம் வரை நீட்டித்த நிலையில், இம்முறை பேச்சுவார்த்தை எட்டு மணிநேரத்திற்கும் குறைவாகவே நடைபெற்றது. அடுத்த பேச்சுவார்த்தைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சீர்திருத்தப் பார்வையில் தற்சார்பு இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.