ETV Bharat / bharat

Karnataka elections 2023: திமுகவை பாலோ பண்ணும் காங்கிரஸ்! ராகுல் காந்தி பளீச் வாக்குறுதி!

author img

By

Published : Apr 28, 2023, 7:42 AM IST

கர்நாடகா சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் திமுகவின் வாக்குறுதிகளை பின் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

Rahul Gandhi
Rahul Gandhi

மங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு அரசு பொது பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கபட மாட்டாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்ட மன்றத்திற்கு வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆட்சியை தக்கவைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.

தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து வேட்பாளர்களை ஆதரித்து கட்சி முக்கிய பிரதிநிதிகள் தீவிர அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கர்நாடகவி முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

உடுப்பியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாது என பிரதமர் மோடி கூறியதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி கடுமையாக சாடினார். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தேர்தலுக்கு நான்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், ஐந்தாவது வாக்குறுதியாக பொது போக்குவரத்தில் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கபடமாட்டாது எனக்வ் கூறினார்.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் கூடும் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராகுல் கூறினார். தொடர்ந்து மீனவ அமைப்பினருடன் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.

மீனவர்களுக்கு 10 லட்ச ரூபாய் காப்பீடு, 1 லட்ச ரூபாய் வட்டியில்லா கடன், மீன்பிடி படகுகளுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு 25 ரூபாய் மானியம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். இந்த உறுதிமொழிகள் அனைத்தும் காங்கிரஸ் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் செயல்படுத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத் தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க : வாகனப்பேரணியில் சாலை விதிமீறல்: பிரதமர் மோடி மீது புகார்; கேரளாவில் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.