புதுச்சேரி: பிப்ரவரி 14ஆம் தேதி, காதலர் தினம் புதுச்சேரியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி, வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான காதலர்கள் புதுச்சேரிக்குப் படையெடுப்பார்கள்.
அப்போது அவர்கள் கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் அமர்ந்து காதலர் தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்கள்.
இதற்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் கழகம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் காதலர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வாழ்த்துகளை தெரிவிப்பார்கள்.
ஆனால், இந்தாண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பாரதி பூங்காவிற்குள் காதலர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காதலர்கள் ஜோடி ஜோடியாக வெளியில் காத்திருந்தனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமூக நல அமைப்பினர், பாரதி பூங்காவில் இருந்த காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வெளியில் நின்றுகொண்டிருந்த காதலர்களை அழைத்துக் கேட்டைத் திறந்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கடற்கரைக்குச் சென்ற அவர்கள் காதலர்களுக்குப் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காதலர் நாளில் திருமணம் செய்த திருநங்கை ஜோடி!