ETV Bharat / bharat

"பீகாரில் ஆட்சியை இழக்கப் போகிறார் நிதிஷ் குமார்... அடுத்த சந்திரபாபு நாயுடு அவர் தான்" - பிரசாந்த் கிஷோர்!

author img

By

Published : Jun 22, 2023, 10:42 PM IST

எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் தோற்பது மட்டுமல்லாமல் சொந்த மாநிலத்திலும் நிதிஷ் குமார் தோல்வியை தழுவி ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் நிலைக்கு தள்ளப்படுவார் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

prashant kishor
prashant kishor

பாட்னா : அனைத்து எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தோல்வியடைவது மட்டுமல்லாமல், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்க முயன்று சந்திரபாபு நாயுடு தோல்வியடைந்தது போல் பீகாரிலும் நிதிஷ் குமார் தோல்வி தழுவுவார் என பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் நாளை 18 கட்சிகளின் தலைவர்களின் மெகா எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேம்நாத் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தை முன்னிட்டு பேசிய பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சி தோல்வியடையும் என்று கூறினார். எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்க முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எடுத்த முயற்சிகள் சந்தித்த தோல்வியை போல் நிதிஷ் குமாரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.

எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள நிதிஷ் குமார், சொந்த மாநிலமான பீகாரில் ஆட்சியை இழக்க நேரிடும் என்று எச்சரித்த பிரசாந்த் கிஷோர், கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்துக் கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டுவர முயற்சித்த போது, ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருவதாகவும், அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு பணியில் ஈடுபட ஒவ்வொரு மாநிலமாக சென்ற சந்திரபாபு, அடுத்த தேர்தலில் 23 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பெற்று எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றதாக பிரசாந்த் கிஷோர் கூறினார்.

முழு நாட்டைப் பற்றியும் கவலைப்படாமல் நிதிஷ் குமார் பீகாரில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தினார். மேலும் பீகாரைப் பற்றி மட்டுமே நிதீஷ் குமார் கவலைப்பட வேண்டும் என்றும் தனக்கென்று ஒரு பாதுகாப்பான இடம் கூட அவருக்கு இல்லை என்றார்.

மேலும் பீகாரில் ஒரு எம்.பி.க்களை கூட வைத்திருக்காத ராஷ்டிர ஜனதா தளம் கட்சி தான் நாட்டின் பிரதமரை தீர்மானிக்கிறது என்றார். மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, காங்கிரசுடன் இணைந்து பணியாற்றத் தயாரா என்பதை முதலில் நிதிஷ் குமாரிடம் தெரிவிக்க வேண்டும் என்றார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு சந்தித்த அதே தோல்வியை நிதிஷ் குமாரும் சந்திப்பார் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : எதிர்க்கட்சிகள் கூட்டம்: மம்தா பானர்ஜி, ஸ்டாலின் பங்கேற்பு... மிரட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.