வாரணாசி : பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற அரசு விழாயொன்றில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் நரேந்திர மோடி கூறுகையில், “மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியதில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பணி இணையற்றது” என்றார்.
550 ஆக்ஸிஜன் ஆலைகள்
தொடர்ந்து அவர், “கரோனா இரண்டாம் அலைக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு எழுந்து நின்று போராடியது. கோவிட்டுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது. நாட்டிலேயே அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மாநிலத்தில் மருத்துவக் கட்டமைப்புகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. 550க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகள் கிராமப்புற உட்புறங்களை அடைந்துள்ளன. இது எதிர்காலத்திலும் உதவும்” என்றார்.
ரூ.1500 கோடி திட்டம்
தொடர்ந்து வாரணாசியில் ரூ.1500 கோடி திட்டங்களை அறிவித்த பிரதமர் மோடி, சிவனின் ஆசியில் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்றவருகின்றன” என்று தெரிவித்தார்.
மேலும், கங்கை நதியின் தொடர்ச்சி மலைகளில் எல்.ஈ.டி மற்றும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் 'கங்கா ஆரத்தி' மற்றும் 'காஷி விஸ்வநாத் தாம்' ஆரத்தியை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்று தெரிவித்தார்.
பாராட்டு
கரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, யோகி அரசை பாராட்டியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : உ.பி.யின் முக்கிய நகரங்களில் இரவு நேர பொதுமுடக்கம்