ETV Bharat / bharat

துருக்கிக்கு இந்தியா உதவிக்கரம்: விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப் படை!

author img

By

Published : Feb 6, 2023, 6:44 PM IST

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக, இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை விரைகிறது. நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

துருக்கிக்கு
துருக்கிக்கு

புதுடெல்லி: துருக்கி மற்றும் சிரியாவில் இன்று காலை (பிப்.6) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமான கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சரவை செயலாளர், பல்வேறு அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் துருக்கிக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

நிவாரணப் பொருட்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மருத்துவக்குழுக்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 100 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், மீட்பு உபகரணங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மருத்துவர்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை துருக்கிக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிவாரணப் பொருட்கள் அனைத்தும் துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.