ETV Bharat / bharat

புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை: மார்ச் 24இல் வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்

author img

By

Published : Mar 18, 2021, 6:16 PM IST

புதுச்சேரி: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வரும் 24ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.

புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், "புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்துச் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்தனியாக மக்களிடம் தேர்தல் வாக்குறுதி அறிக்கை தொடர்பாக கருத்து கேட்கும் பணி நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது கருத்தைப் பதிவுசெய்துள்ளனர்.

மக்களுடைய கருத்துகள் அனைத்தையும் தற்பொழுது பரிசீலனை செய்துவருகிறோம். வருகிற 24ஆம் தேதி வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக இருக்கும்.

தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரி வருவார்கள்" எனத் தெரிவித்தனர்.

மேலும், "முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாதது ஏன் என மக்களுக்கே தெரியும். முழுமையான முதலமைச்சராக அவர் செயல்படாததால்தான் தற்போது மக்களைச் சந்திக்கப் பயந்து போட்டியிடவில்லை" என்று விமர்சித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.