ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்று வழங்கியது.
கரோனாவுக்கு எதிரான போரின் முக்கிய நடவடிக்கையாக தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை. சீரம், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டை பெருமையடைய செய்த திறமைவாய்ந்த கடும் உழைப்பை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன். கரோனா இல்லாத இந்தியாவை உருவாக்கப் பாடுபடும் மோடிக்கு வாழ்த்துகள்.
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை, பெரிய மாற்றங்களை உருவாக்கும். மீண்டும் ஒரு முறை, நெருக்கடியான காலக்கட்டத்தில் புதிய இந்தியா மனிதநேயத்திற்கு உதவும் வகையில் கண்டுபிடிப்புகளை உருவாக்க ஆயுத்தம் காட்டியுள்ளது. பிரதமரின் தற்சார்பு இந்தியா என்ற கொள்கைக்கு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது மேலும் உத்வேகம் அளிக்கும்.
பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில், விஞ்ஞானிகள், மருத்துவ பணியாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், கரோனா முன்கள பணியாளர்கள் என பலர் அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றினர். மனிதகுலத்திற்காக அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.