ETV Bharat / bharat

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் இன்று திறப்பு.. சிறப்புகள் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 12:10 PM IST

Updated : Jan 12, 2024, 12:17 PM IST

Mumbai Trans Harbour Link: மும்பையில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய கடல் பாலத்தின் சிறப்புகள் என்ன
இந்தியாவின் மிகப்பெரிய கடல் பாலத்தின் சிறப்புகள் என்ன

மும்பை (மகாரஷ்டிரா): இந்தியாவின் மிகப்பெரிய கடல் பாலத்தின் திறப்பு விழா இன்று (ஜன.12) நடைபெற உள்ளது. "அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது" எனப் பெயரிடப்பட்ட அந்த பாலத்தை, பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்வில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அம்மாநில ஆளுநர் ரமேஷ் பயாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக இப்பாலத்திற்கு 'அடல் சேது' என பெயரிடப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கான அடிக்கல் பிரதமர் மோடியால் நாட்டப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு, மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) சார்பில், கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. இப்பாலத்தின் பணிகளுக்காக, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) 18 ஆயிரம் கோடி ரூபாய் மேம்பாட்டுக் கடனாக வழங்கியது.

மேலும், 5.5 கி.மீ நீளம் தரைப் பகுதியிலும், 16.5 கி.மீ நீளம் கடல் பகுதியிலும் என மொத்தம் இந்த பாலம் 21.8 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது. இப்பாலத்தின் மூலம், உலக அளவில் 12 பெரிய கடல் பாலத்தைக் கொண்ட பெருமையை இந்தியா அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இருபுறமும் மூன்று தடங்கள் என 6 தடங்களைக் கொண்ட இந்த பாலம், தெற்கு மும்பையின் செவ்ரி (Sewri) பகுதியில் துவங்கி, தானே க்ரீக் (Thane Creek) வழியாகச் சென்று, நவா ஷேவா (Nhava Sheva) அருகே உள்ள சிர்லே (Chirle) பகுதியில் நிறைவடைகிறது.

இந்த மிகப்பெரிய கடல் பாலம், மும்பை-புனே விரைவுச்சாலை, மும்பை-கோவா விரைவுச்சாலை மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் நவி மும்பை சர்வதேச விமானம் ஆகியவற்றை எளிதில் இணைக்கும். மேலும், செவ்ரி, சிவாஜி நகர், சிர்லே பொன்ற நகரின் முக்கியமான பகுதிகளையும், போக்குவரத்து நெரிசலின்றி விரைவாக இணக்கும் வகையில், இந்த பாலம் உதவும் என கருதப்படுகிறது.

இந்த அடல் சேது பாலம் மூலம், மும்பை-புனே இடையேயான பயண நேரத்தையும் குறைக்கும். முன்னதாக, மும்பை-நவி மும்பை இடையேயான பயண நேரம் 2 மணி நேரமாக இருந்த நிலையில், தற்போது இந்த 20 முதல் 30 நிமிடங்களாக அடல் சேது குறைத்துள்ளது.

மேலும், இந்த பாலத்தில் பயணிப்பதற்காக சுங்கத் தொகையாக ஒரு வழி பயணத்திற்கு 250 ரூபாய் என்றும், மறுவழியாக 370 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சுங்கச்சாவடியில் ஓபன் ரோட் டோலிங் (Open Road Tolling) என்கிற அம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த பாலத்தில் செல்லும் கார்கள் சுங்கச்சாவடியில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும், 100 கி.மீ வேகத்தில் கூட சுங்கச்சாவடியை கடக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, இந்த அடல் சேது பாலத்தில் செல்லும் வாகனங்களின் வேக வரம்புகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், கார், டாக்ஸி, இலகுரக வாகனங்கள், மினி பேருந்துகள், பேருந்துகள் உள்ளிட்டைவைகளுக்கு அதிகபட்ச வேக வரம்பாக 100 கி.மீ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், பாதுகாப்புகளை கருத்தில் கொண்டு, பாலத்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் 40 கி.மீ வேகத்தை கடைபிடிக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புகளை கருத்தில் கொண்டு, இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் டிராக்டர் இந்த மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்பு சாலையில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உத்தர பிரதேசத்தில் 5 கூடுதல் விமான நிலையங்கள்! திறப்பு எப்போது? மத்திய அமைச்சர் அறிவிப்பு!

Last Updated : Jan 12, 2024, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.