ETV Bharat / bharat

பிபிசி இந்தியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு! என்ன காரணம் தெரியுமா?

author img

By

Published : Apr 13, 2023, 1:43 PM IST

பிபிசி இந்தியா செய்தி நிறுவனத்தின் மீது அந்நிய செலாவணி சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது.

BBC India
BBC India

டெல்லி : வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில் முறைகேடு செய்ததாக பிபிசி இந்தியா நிறுவனத்தின் மீது அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. பிரிட்டனை தலைமை இடமாக கொண்டு பல்வேறு நாடுகளில் பிபிசி செய்தி நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்தியாவில் தலைநகர் டெல்லியை பிரதானமாக கொண்டு பிபிசி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. அண்மையில் 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்த ஆவணப் படத்தை "இந்தியா : மோடியின் கேள்விகள்" என்ற தலைப்பில் வெளியிட்டது. நேரடியாக இந்த ஆவணப் படம் வெளியாகவிட்டாலும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டது.

இந்த ஆவணப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது மோடியின் அலட்சியப் போக்கு இருந்ததாக அந்த ஆவணப் படம் பிரதிபலித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆவணப்படத்தை பொது வெளியில் திரையிட தடை விதிக்கப்பட்டது. ட்விட்டரில் பிபிசி நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட ட்வீட்டுகளும் அழிக்கப்பட்டன.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பிபிசி ஆவணப்படத்தை தடை செய்தது. மேலும் தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஆவணப் படம் திரையிடப்பட்டது. இதனால் கல்வி நிலையங்களில் கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச அளவில் நிதி பெறுவதில் பிபிசி இந்தியா நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. பிபிசி இந்தியா நிறுவனத்தின் செய்தித் துறை மற்றும் நிர்வாகத் துறைகளை சேர்ந்தவர்களை ஆஜராகுமாறும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பயதாக கூறப்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் நிதி பெற்றது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அமலாக்கத்துறை தரப்பில் பிபிசி இந்தியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பிபிசி இந்தியா செய்தி நிறுவனத்தின் டெல்லி, மும்பை, அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன் பிபிசி நிறுவனத்தை அரசு நிதி உதவி பெறும் நிறுவனம் என அந்த ஊடகத்தின் ட்விட்டர் முகப்பு பக்கத்தில் பதிவிடப்பட்டது. இதற்கு பிபிசி நிறுவனம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துடன் கலந்து ஆலோசிக்க உள்ளதாக பிபிசி நிறுவனம் தெரிவித்தது. அண்மையில் ட்விட்டர் அதிபர் எலான் மஸ்க்கும் பிபிசி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பதின்டா ராணுவ மைய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாத முகாந்திரமா? அம்ரித் பால் சிங்க்கு தொடர்பா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.