ETV Bharat / bharat

Earthquake: ராஜஸ்தான், மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

author img

By

Published : Jul 21, 2023, 9:21 AM IST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், மணிப்பூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் இன்று (ஜூலை 21) அதிகாலை 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்து உள்ளது. இதன் அடிப்படையில், இன்று அதிகாலை 4.09 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இதனையடுத்து, அதிகாலை 4.22 மணிக்கு 3.1 ரிக்டர் அளவிலும், அதிகாலை 4.25 மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து அரை மணி நேரத்திற்குள் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பொருட்சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிலநடுக்கம் உணரப்பட்ட தகவல் கிடைத்ததும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பவ இடங்களுக்கு விரைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது.

அதே போன்று இது தொடர்பாக ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜெய்ப்பூர் உள்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. அதேநேரம், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நான் நம்புகிறேன்” என தெரிவித்து உள்ளார்.

மேலும், நிலநடுக்கம் உணரப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜெய்ப்பூரில் வசித்து வரும் மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதேபோல், பெரும் பதற்றம் நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்திலும் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் நகரில் இன்று அதிகாலை 05.01 மணிக்கு 20 கிலோ மீட்டர் ஆழத்தில் 3.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு பொருட்சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது நிலநடுக்கம் உணரப்பட்டது அங்கு வாழும் பொதுமக்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க: Chamoli accident: கங்கை திட்ட பணியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 16 பேர் பலி - வீடியோ வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.