ETV Bharat / bharat

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு - மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு!

author img

By

Published : Apr 17, 2023, 5:30 PM IST

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Manish Sisodia
Manish Sisodia

டெல்லி : மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வரும் 29ஆம் தேதி வரை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

கடந்த 2021-22ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் அரசால் வெளியிடப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் உள்ள சில முக்கிய விஷயங்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதாகவும், அதனால், சில தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு கைமாறாக அரசியல் கட்சியினர் பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வினாய் குமார் சக்சேனா பரிந்துரை செய்தார். முறைகேடு புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இதே விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்து உள்ளதாகக் கூறி அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து தனியாக விசாரித்து வருகிறது.

இந்தப் புகார் தொடர்பாக மதுபானத் துறையை, தன் வசம் வைத்து இருந்த டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம், மணீஷ் சிசோடியா விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தொடர்ந்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் தொடர் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளார். மதுபான முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரிய மணீஷ் சிசோடியாவின் மனுவை அண்மையில் சிறப்பு நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் நிறைவுபெற உள்ளதை அடுத்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்குத் தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

தொடர்ந்து சிபிஐ தொடர்ந்து வழக்கில் ஏப்ரல் 27ஆம் தேதி வரையும், அமலாக்கத் துறையின் வழக்கில் ஏப்ரல் 29ஆம் தேதி வரையும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை நீட்டித்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ நேற்று (ஏப் 16) விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஒரே பாலின திருமணம் - "நகர்ப்புற உயரடுக்கு பார்வையை கொண்டுள்ளது'' - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.