ETV Bharat / bharat

ராகுலுக்கு எம்பி பதவியை மீட்டுத் தர தாமதம் - நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்பதை தடுக்க சதி என குற்றச்சாட்டு!

author img

By

Published : Aug 6, 2023, 6:04 PM IST

உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல்காந்திக்கு உடனடியாக எம்பி பதவியை கொடுக்காமல் தாமதிக்க மத்திய பாஜக அரசு திட்டமிடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த தாமதம் ஏற்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

Congress
ராகுல்காந்தி

டெல்லி: 'மோடி' என்ற பெயரை விமர்சித்தது தொடர்பான அவதூறு வழக்கில், ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி முறையீடு செய்த நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கில், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, கடந்த 4ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க போதுமான முகாந்திரங்களை கீழமை நீதிமன்றம் கூறவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சியினர் மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றனர். சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், ராகுல்காந்தியின் எம்பி பதவியை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 5) மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடிதம் வழங்கி வலியுறுத்தினர்.

ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இரண்டு நாட்கள் ஆகியும், ராகுல் காந்தியை மீண்டும் எம்பி பதவியில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ராகுல்காந்திக்கு உடனடியாக எம்பி பதவியை கொடுக்காமல் தாமதிக்க மத்திய பாஜக அரசு திட்டமிடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வரும் 8ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதம் நடைபெறவுள்ளதால், ராகுல்காந்தியை அதில் கலந்து கொள்ளவிடாமல் தடுப்பதற்காகவே இந்த தாமதம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான அபிஷேக் மனு சிங்வி, "எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பது போலவே, ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது.

இன்னும் இரண்டு நாட்களுக்கு நம்பிக்கையுடன் காத்திருப்போம். அதிலும் நியாயம் கிடைக்கவில்லை எனில் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்வோம்" என்று கூறினார். மாநிலங்களவை எம்பி ரஜினி பாட்டீல் கூறுகையில், "நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல்காந்தி மக்களவையில் இருக்க வேண்டும்.

ஆனால், அது நடக்குமா? நடக்காதா? என்று தெரியவில்லை. உடனடியாக ராகுல் காந்தியை எம்பி பதவியில் பணியமர்த்த வேண்டும்" என்று கூறினார். காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "மக்களவையில் தொழிலதிபர் அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதன் பிறகுதான் இந்த அவதூறு வழக்கு தீவிரப்படுத்தப்படு, அதில் ராகுல் காந்தியை குற்றவாளியாக்கி சிறை தண்டனை விதித்தனர்.

இப்போது ராகுல் காந்தி மீண்டும் மக்களவைக்கு வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேச வேண்டும். நாளைக்கே அவரது பதவி மீண்டும் வழங்கப்பட வேண்டும். பதவி கிடைத்தால், அவரது அரசு இல்லமும் அவருக்கு கிடைத்துவிடும்.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி உருவாகி உள்ளார். அவர் மக்களவையில் அரசை கேள்வி கேட்பதை பாஜக விரும்பவில்லை. ஆனால் எங்களது தலைவர் அச்சமற்றவர். மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பேசாததால், நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தோம். மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை. மணிப்பூரில் அமைதி நிலவ வலியுறுத்தி ராகுல்காந்தி அங்கு சென்றார்" என்று கூறினார்.

இதையும் படிங்க: Rahul Gandhi: ராகுல் காந்திக்கு கிடைத்த நல் தீர்ப்பும்... வயநாடு தொகுதி மக்களின் மனமும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.