ETV Bharat / bharat

மல்யுத்த வீரர்கள் - போலீசார் இடையே மோதல்; ஜந்தர்மந்தரில் கண்காணிப்பு தீவிரம்!

author img

By

Published : May 4, 2023, 6:02 PM IST

டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக மல்யுத்த வீரர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டுள்ளது.

Wrestlers protest
மல்யுத்த வீரர்கள் போராட்டம்

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவர், பிரிஜ் பூஷண் சிங். பாஜக எம்.பி.யான இவர் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். பூஷண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பூஷண் சிங் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசாருடன் மோதல்: இந்நிலையில் நேற்றிரவு (மே 3) போராட்டக் களத்துக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி சென்றார். அவர் போலீசாரின் அனுமதியின்றி படுக்கையை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசாருக்கும், சோம்நாத் பாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து போலீசாருக்கும், மல்யுத்த வீரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் மல்யுத்த வீரர்கள் சிலர் காயம் அடைந்தனர். குடிபோதையில் இருந்த போலீசார் சிலர், தங்களை அடித்து இழுத்ததாக மல்யுத்த வீரர்கள் குற்றம்சாட்டினர். இதனால் போராட்டக்களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

குற்றச்சாட்டுக்கு மறுப்பு: எனினும், மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ள டெல்லி போலீசார், காவலர்கள் யாரும் மது அருந்தவில்லை என விளக்கம் அளித்துள்ளனர். மோதலில் போலீசார் 5 பேர் காயம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதற்கிடையே போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நள்ளிரவு சென்ற காங்கிரஸ் நிர்வாகி தீபிந்தர் சிங் ஹூடா கைது செய்யப்பட்டார்.

வீராங்கனை கண்ணீர்: இந்நிலையில் செய்தியாளர்களிடம் கூறிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், "நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்களை கொலை செய்ய வேண்டும் என விரும்பினால் கொன்றுவிடுங்கள்" என கண்ணீர் விட்டு அழுதார்.

பதக்கங்களை திருப்பி வழங்க முடிவு: பின்னர் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறும்போது, "போலீசார் எங்களை அவமதிக்கிறார்கள். தொடர்ந்து இதுபோல அவர்கள் செயல்பட்டால், நாட்டுக்காக நாங்கள் வென்ற பதக்கங்களை அரசிடம் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளோம். போலீசார் மது அருந்திவிட்டு எங்களிடம் அத்துமீறுகிறார்கள்" எனக் கூறினார்.

வழக்கு தள்ளுபடி: இந்நிலையில் பாலியல் புகார் குறித்த வழக்கை நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரிக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (மே 4) விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுதாரர்கள் கேட்டுக் கொண்டார். அந்த இரண்டு கோரிக்கைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. இனி, மனுதாரர் டெல்லி உயர் நீதிமன்றம் அல்லது விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம். இந்த மனு மீதான வாதங்கள் முடித்து வைக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 4 வயது சிறுமி வன்கொடுமைச் சம்பவம்: தூக்கு தண்டனைக் கைதியின் கருணை மனு நிராகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.