ராய்ப்பூர்: ஊரடங்கு நேரத்தில் வெளிய சுற்றித்திரிந்தவரை சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ஷர்மா, கன்னத்தில் அறைந்து அவரது செல்போனை உடைத்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அச்சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சியர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் செயலை அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் கண்டித்ததோடு அவரை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், இச்சம்பவத்திற்காக தான் வருத்தப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட இளைஞன், அவரது குடும்பத்தினரிடம் தான் மன்னிப்புக் கேட்பதாகவும் தெரவித்துள்ளார். அலுவலர்கள் இதுபோல நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அதிகம்பேரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், இளைஞர் ஒருவரை மாவட்ட ஆட்சியர் கன்னத்தில் அறைவதும் அவரிடமிருந்து செல்போனை பிடுங்கி தரையில் போட்டு உடைப்பதும் பதிவாகியுள்ளன.
இச்சம்பவத்திற்கு மன்னிப்புக்கோரிய மாவட்ட ஆட்சியர், அந்த இளைஞர் அலுவலர்களிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறியுள்ளார். தடுப்பூசி போடுவதற்காக ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்ததாக அவர் கூறினாலும், அவரிடம் அதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும், அலுவலர்களிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாலேயே தான் கோபப்பட்டு அறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, சூரஜ்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலின் வேகம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீன் பிரியர்களால் ஸ்தம்பித்துப்போன காசிமேடு!