லக்னோ : 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனக்கு பிறகு கட்சியை தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த் தலைவராக பொறுப்பேற்று வழிநடத்துவார் என்று அறிவித்து உள்ளார். 31 வயதாகும் ஆகாஷ் ஆனந்த், மாயாவதியின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த ஆகாஷ் ஆனந்த் அதன்பிறகு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பகுஜன் சமாஜ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக உருவெடுத்தார்.
மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு ராஜஸ்தான் அல்வாரில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பாதயாத்திரையில் 13 கிலோ மீட்டர் தூரம் நடந்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ஆகாஷ் ஆனந்த்.
இதற்கிடையே தான் ஆகாஷ் ஆனந்த் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவராவார் என பேச்சுகள் கட்சிக்குள்ளேயும், வெளியேயும் அடிபடத் தொடங்கின. பகுஜான் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற நிலைக்கு ஆகாஷ் ஆனந்த் உயர்ந்தார். இந்நிலையில் மாவட்ட அளவில் நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில், மாயாவதி இப்படி அறிவித்து உள்ளார்.
இருப்பினும், மாயாவதி வாய்வழியாகவே அறிவித்து உள்ளார், என்றும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. முன்னாள் உத்தர பிரதேசம் முதலமைச்சர் மாயாவதிக்கு 67 வயது கடந்த விட்ட நிலையில், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு உத்தர பிரதேசம் தவிர்த்து ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்டு ஆகாஷ் ஆனந்திற்கு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் பொறுப்பை முழுமையாக வழங்கிட மாயாவதி திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
அதேநேரம், மாயாவதியின் இந்த அறிவிப்பு உள்கட்சியிலேயே பல்வேறு பூசல்களை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதேபோல் பகுஜான் சமாஜ் கட்சியிலும் குடும்ப அரசியல் தலை தூக்குகி உள்ளதாக எதிர்க் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : சத்தீஸ்கர் முதலமைச்சர் தேர்வு - யார் இந்த விஷ்ணு தியோ சாய்?