ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சோபாஸ்னி காவல் வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரா (வயது 50). இவருக்கு இந்திரா என்ற மனைவியும், நிதின் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் போபால்கர் பகுதியில் உள்ள ஒரு கைவினைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக ராஜேந்திராவின் வீடு வெகு நேரம் ஆகியும் திறக்கப்படாமலேயே இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது ராஜேந்திரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, ராஜேந்திரா தவிர அவரது மனைவி இந்திரா, மகன் நிதின் ஆகியோரும் படுக்கையில் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று பேரின் உடல்களை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களை சேகரித்தனர்.
இது குறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது மனைவி, மகன் ஆகியோரை ராஜேந்திரா கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விளையாட சென்ற சிறுவன் உயிரிழப்பு; காவல் துறை விசாரணை!