புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி சரஸ்வதி. இவர் ஈஸ்வரன் கோயில் தெருவில் அமைந்துள்ள பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் 60 ஆயிரம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதத்தோறும் தவணை தொகை செலுத்தி வருகிறார்.
தற்போது ஊரடங்கு காரணமாக கடந்த இரு மாதங்களாக தவணை தொகை செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதற்காக நிதி நிறுவனத்தில் இருந்து அப்பெண்ணை தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், கடன் தொகை செலுத்தாதது குறித்து கேட்டுள்ளார். மேலும், அப்பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் ஊழியர் பேசியுள்ளார். இதுகுறித்து சரஸ்வதி தனது கணவருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெண்ணிடம் தகாத வார்த்தையால் பேசிய நிதி நிறுவனத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட ஊழியர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், அப்பெண்ணின் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தொலைபேசி, கணினி, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க:ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி வரை மோசடி...பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு!