மத்திய அரசிற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. ஊழியர்களுக்குக் ஊதியம் கொடுக்க முடியாத காரணத்தால் ஆள்குறைப்பு, ஊதியம் குறைப்பு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
தற்போது கரோனா பாதிப்பால் மற்ற விமானச் சேவைகள் முழுதும் தடைபட்டப்போதிலும், ஏர் இந்திய ஊழியர்கள்தான் இதுபோன்ற கடுமையான நேரத்தில் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் ஏர் இந்தியாவிற்கு நிதிஉதவி அளித்து உதவ வேண்டும் என்று பைலட் தொழிற்சங்கங்கள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கோரிக்கை வைத்துள்ளன.
ஐபிஜி, ஐசிபிஏ பைலட் தொழிற்சங்கள் இது தொடர்பாக தெரிவிக்கையில், ”ஏர் இந்தியா நிறுவனம் எங்களது ஊதியத்தை நீண்ட காலமாக முறையாக வழங்காமல் உள்ளது. இன்றைய நிலவரப்படி பிப்ரவரி முதல் முழு ஊதியம் வழங்கப்படவில்லை. மூன்று மாத ஊதியம் நிலுவையில் உள்ளது.
பணம் இல்லை என்றும், ஊதியத்தை கொடுப்பதற்கு முறையான திட்டமிடலும் இல்லை என்றும் நிர்வாகம் எங்களை கைவிட்டுவிட்டது. எங்களது குடும்பத்தை கவனிக்க முடியாமல் சிரமத்தில் உள்ளோம். ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கும் வரையாவது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நிதியுதவி அளித்து மத்திய அரசு உதவ வேண்டும்” என பைலட் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
இதையும் படிங்க: சிறப்பு விமானம் மூலம் கேரளா வந்தடைந்த இந்தியர்கள்...!