ETV Bharat / bharat

ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அசோக் கெலாட் உருக்கமான கடிதம்!

author img

By

Published : Aug 9, 2020, 8:15 PM IST

ஜெய்ப்பூர் : காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் மக்களின் நலன் காக்க உண்மையுடன் நிற்க வேண்டுமென ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதிய அசோக் கெலாட்!
ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதிய அசோக் கெலாட்!

கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு தற்போது அரசியல் பனிப்போராக மூண்டுள்ளது.

மாநில முதலமைச்சராக உள்ள அசோக் கெலாட், தங்களை அடிமைப் போல நடத்துவதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தரப்பு குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், ஜெய்ப்பூர் ஃபேர்மான்ட் நட்சத்திர விடுதியில், ஜூலை 15ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்திலும், சச்சின் பைலட்டை துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும், மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியில் முக்கிய பொறுப்புகள் வகித்துவந்த சச்சின் பைலட்டின் ஆதரவாளரான முகேஷ் பாக்கர் எம்.எல்.ஏ., ராகேஷ் பரீக், அபிமன்யு பூனியா என தொடர்ச்சியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிரான தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்ததாக அறிய முடிகிறது.

இதனிடையே, சச்சின் பைலட் தரப்பினர் ராஜஸ்தான் ஆளுநரை சந்தித்து அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க கோரிக்கை விடுத்தனர். அரசியல் கொந்தளிப்பைக் கண்ட ராஜஸ்தானில், ஒருமாத காலத்திற்கு பிறகு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் கெலாட்டுக்கு அவையில் பெரும்பான்மையை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 9) ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "தவறான முன்னுதாரணத்தை தவிர்ப்பதற்கும், மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பதற்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் நீங்கள் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

நீங்கள் வெவ்வேறு அரசியல் கட்சியிலிருந்தும் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றிருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அது நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களின் பிரதிநிதிகள். அவர்கள் எந்த நலனுக்காக அரசை தேர்ந்தெடுத்தார்களோ அந்த அரசை தொடர்ந்து வலுவாக செயல்பட வைக்க வேண்டும் என உணர வேண்டும். வாக்காளர்களில் உணர்வை புரிந்துகொண்டு நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநில மக்களின் பெரிய நலனுக்காக செயல்படுவார்கள். வளர்ச்சி குறித்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒத்துழைப்பார்கள் என உங்களில் ஒருவனாக நம்புகிறேன்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.