ETV Bharat / bharat

கேரளா மாடல் சுகாதாரத்தை பின்பற்றலாமே...!

author img

By

Published : May 22, 2020, 4:36 PM IST

ஹைதராபாத்: நாடு முழுவதும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கேரளா சிறப்பான முறையில் சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வைரஸை கட்டுக்குள் வைத்துள்ளது.

kerala
kerala

இந்தியாவில் நூறாவது கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேல் உயர 64 நாட்கள் மட்டுமே ஆனது. அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், லாக்டவுனுக்கு தளர்வு அளித்த பிறகு, நாள்தோறும் கரோனா பரவக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவில் 70 விழுக்காடு வழக்குகள் 19 மாவட்டங்களில் பதிவாகியுள்ளன என்று நிதி ஆயோக் கூறுகிறது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது நாம் சிறப்பாகச் செயல்படுகிறோம். இந்தியாவின் இறப்பு விழுக்காடும் நோய் பாதித்தவர்கள் குணமடைந்தவர்களின் விழுக்காடும் சீராக உள்ளது. கரோனா நோய்த் தொற்று இந்தியாவில் இத்தனையாண்டுகள் பெரிதும் கண்டுகொள்ளப்படாத மருத்துவ சுகாதாரத் துறைக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற பேரழிவுகளைச் சமாளிக்க கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமான சுகாதார மையங்களை அமைப்பதில் முதலீடு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 736 மாவட்டங்களில் 7 ஆயிரம் 96 பகுதிகளில் நோய் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொற்று நோய் சிகிச்சைக்காக அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் நோய் பரிசோதனை மையம் உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தார்.

'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் புறக்கணிக்கப்பட்ட மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் நெருக்கடி மருத்துவ மற்றும் சுகாதாரத் துறைகள் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2017ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.6 விழுக்காடு மட்டுமே சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், 2025ஆம் ஆண்டிற்குள் அதை 2.5 விழுக்காடாக உயர்த்துவதற்கான வலுவான தேவை இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

'உடல்நலமே உண்மையான செல்வம்' என்ற பழமொழி பொதுமக்களுக்கு தெரிந்த ஒன்றே, ஆனால் நவீன அரசு இந்த அடிப்படை உண்மையை உறுதிசெய்வதற்கு தேவையான சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கும் தவறிவிட்டதால், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளை தாங்க முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள்.

லட்சக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்தியா, 195 நாடுகளில் நடைபெற்ற சர்வதேச ஆய்வின்படி சேவையின் தரம் மற்றும் சுகாதாரத் தரத்தில் 145ஆவது இடத்தில் உள்ளது. கிராம மக்களுக்கு விரிவான மருத்துவ சேவைகளை வழங்க சுகாதார மையங்களின் சரியான செயல்பாட்டிற்கு ரூ. 30,000 கோடி தேவைப்படும் நிலையில், பட்ஜெடில் ரூ. 1,350 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில், 15ஆவது நிதி ஆணையத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2, 3ஆம் அடுக்கு நகரங்களில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரத்து 200 படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனைகளை அமைக்க பரிந்துரைத்தது. சுகாதார பட்ஜெட்டில் மூன்றில் இரண்டு பங்கு முதன்மை சுகாதார சேவைகளுக்கு திருப்பி விடப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

மறுபுறம், நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் கூட சுகாதார காப்பீடு மேற்கொள்ளாத நிலையில், நிதி அயோக் அமைப்பு சுகாதாரச் சுமையைக் குறைக்க அமெரிக்க மாடலை பரிந்துரை செய்துள்ளது.

மூழ்கும் படகான சுகாதாரத் துறையை காப்பாற்றுவதற்காக, பொதுத்துறை - தனியார்துறை கூட்டமைப்பு சிறந்த மாற்றாகும், மேலும் சுகாதாரத்தை மேம்படுத்த மாவட்ட மருத்துவமனைகளை தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற பரிந்துரை விமர்சனத்தையும் சேர்த்துதான் முன்வைக்கிறது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை எனப்படும் என்.எச்.எஸ் நாட்டின் சாமானிய குடிமகனுக்கும் பிரதமருக்கும் ஒரே மாதிரியான மேம்பட்ட சுகாதார சேவையை உறுதி செய்கிறது.

சுகாதார அமைப்பின் கேரள மாடல் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ஒரு சிறந்த சுகாதார அமைப்புக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். மருத்துவமனைகளை கீழ்மட்ட நிலைவரை வலுப்படுத்துதல், வெவ்வேறு துறைகளுக்கிடையே முறையான ஒருங்கிணைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் கரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட பெரும் சவாலைக் கட்டுப்படுத்த முடியும். இதுபோன்ற சிறந்த முன்மாதிரியை நோக்கி ஆரோக்கியமான இந்தியாவை காண வேண்டும்.

இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராகப் பொறுப்பேற்றார் ஹர்ஷ் வர்தன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.