ETV Bharat / bharat

விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்: ஜே.என்.யூ. சுற்றறிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு!

author img

By

Published : May 26, 2020, 7:18 PM IST

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்புமாறு அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் - மாணவர்கள் இடையே புதிய மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

jnu-asks-students-residing-in-hostels-to-return-home-union-opposes
jnu-asks-students-residing-in-hostels-to-return-home-union-opposes

கரோனா வைரஸ் காரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் டீன் சிதீர் பிரதாப் அனுப்பிய சுற்றறிக்கையில், ''மார்ச் மாதத்திலேயே மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தினோம். ஆனால் அந்த நேரத்தில் போக்குவரத்து பிரச்னை உள்ளிட்ட காரணங்களைக் கூறி விடுதியிலேயே தங்குவதற்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறை சார்பாக ஜூன் 1ஆம் தேதியிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லவுள்ளன. டெல்லியிலும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்களை அழைத்துச் செல்ல அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதனால் மாணவர்கள் அனைவரும் விடுதிகளிலிருந்து வெளியேறி, சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும். ஜூன் 25ஆம் தேதிக்குப் பின் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதும் மாணவர்கள் திரும்பி வரலாம். அதுவரை கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மாணவர் சங்கங்கள் எதிர்த்துள்ளன. இதுகுறித்து மாணவர் சங்கம் சார்பாக பேசுகையில், ''பயணத்தில் உள்ள அபாயங்களை தெரிந்துகொண்ட பின் தான் மாணவர்கள் விடுதியில் தங்க முடிவு செய்துள்ளனர். கரோனாவை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டிய சூழலில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மாணவர்களை பாதிப்பதோடு கரோனாவுக்கு எதிரான போராட்டத்தையும் நீர்த்துப்போக செய்ய உதவுகிறது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கை வீட்டிற்குச் செல்ல வேண்டும் என நினைக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறது'' என்று கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், ''நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாணவர் சங்கத் தலைவர்கள் கருத்தியல் வண்ணத்தைக் கொடுக்கின்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில், மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள கல்லூரி நிர்வாகத்தின் முடிவு புதிய மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் உலாவும் போலி இ - பாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.