ETV Bharat / bharat

இணைய சேவை முடக்கம் : ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணை நடத்த வேண்டாமென மத்திய அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை !

author img

By

Published : Jul 28, 2020, 7:31 PM IST

டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் இணையப் பயன்பாடு மீதான தடையை நீக்கக் கோரும் வழக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி விசாரிக்க வேண்டாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

இணைய சேவை முடக்கம் : ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணை நடத்த வேண்டாமென மத்திய அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை !
இணைய சேவை முடக்கம் : ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணை நடத்த வேண்டாமென மத்திய அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை !

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவுகளை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசாங்கம் திரும்பப்பெற்றது. அத்துடன் அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதனையடுத்து மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டப்பேரவை அல்லாத லடாக் என்ற யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்ற தகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு சட்டவிதிகள் மற்றும் தடைகள் அமலுக்கு வந்தது. இணையம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஸ்ரீநகர் உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல பகுதிகள் முள்வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டன. நகரத்தின் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்நிலை தொடர்கிறது. இதன் ஒரு பகுதியாக, அங்கு இணையப் பயன்பாடுகளும் தடைசெய்யப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, காஷ்மீரில் காலவரையறையின்றி இணையதளத்தை முடக்கி வைப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து ஜனவரி 18ஆம் தேதி, முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்பேசி சேவைகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அப்போதும் 4ஜி இணையத்தள சேவைகள் தொடங்க மத்திய உள்துறை அமைச்சகம் முன்வரவில்லை.

இந்நிலையில், கடந்த மே 11ஆம் தேதியன்று உள்துறை செயலாளர் தலைமையில் 3 அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், 4 ஜி வழங்கப்படாதது குறித்து மனுதாரரின் கருத்துக்களை ஆராயவும், அவர்கள் பரிந்துரைத்த மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளவும் உத்தரவிட்டது.

அந்த குழுவானது அமைக்கப்பட்டு இரண்டு மாதங்களான நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவில்லை என மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை24ஆம் தேதியன்று நடைபெற்ற இணைய சேவை கட்டுப்பாடுகள் குறித்த விசாரணையில் அந்த சிறப்பு குழுவானது, 4 ஜி இணைய சேவைகளை மீண்டும் தொடங்குவது இப்போதைய சூழலில் சரியானதாக இருக்காது என கருதுகிறது என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹுசெபா அஹ்மதி, " 4 ஜி சேவைகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக ஆளுநர் ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதற்கான பரிந்துரைகளையும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, ஜம்மு-காஷ்மீரின் தகவல் தொழிற்நுட்பத்துறையின் தலைவர், 4 ஜி இணைய சேவையை வழங்கலாம் என்று சொன்னால் அரசு அதனை பின்பற்ற வேண்டும்" என வலியுறுத்தினார்.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால் மற்றும் மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா ஆகியோர், "கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்றுதான் காஷ்மீரின் சிறப்பு தகுதி ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் உள்துறை அலுவலர்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு பின்னர் மாற்ற வேண்டும்" என கால அவகாசம் கோரினர்.

இதனையடுத்து நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.