கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அர்தலாகுன்னூ பகுதி அருகே ஒரு தோட்டத்தில் கடந்த வாரம் பலத்த காயங்களுடன் ஆண் யானை ஒன்று விழுந்துகிடந்தது.
தகவல் அறிந்து சம்பவம் இடம் வந்த வனத் துறையினர், யானையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமை கால்நடை மருத்துவர் அருண் சக்காரியா தலைமையில் அதற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று (திங்கள்கிழமை) சிகிச்சைப் பலனின்றி அந்த யானை உயிரிழந்தது.
இது குறித்து மன்னார்காடு (தென்) பிரிவு வனத்துறை அலுவலர் சஜிகுமார் கூறுகையில், "மற்ற காட்டு யானைகளுடன் நடந்த மோதலில் இந்த யானை காயமடைந்ததாகத் தெரிகிறது.
வயிறு, நாக்கு, ஆண் உறுப்பு பகுதிகளில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. எனினும் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தது" என்றார்.
அண்டை மாவட்டமான பாலக்காட்டில், கடந்த மாதம் 27ஆம் தேதி வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசி பழத்தைத் தின்று கருவுற்ற யானை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்த யானையின் இறப்பு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : செய்யாத குற்றத்திற்காக விமானி ஒருவரை வாட்டி வதைக்கும் வலதுசாரி கும்பல்!