ETV Bharat / bharat

ஆர்.ஓ. குடிநீர் விற்பனை - நாம் குடிக்கும் நீர் எவ்வளவு தூய்மையானது?

author img

By

Published : Jan 9, 2020, 7:21 PM IST

ஹைதராபாத்: நாட்டில் குழாய் நீர் சுத்தமற்று இருப்பதால், மக்கள் ஆர். ஓ கேன் எனப்படும் சவ்வூடு பரவல் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதன் சுகாதாரம் குறித்த ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

pure water
pure water

தண்ணீர் பற்றாக்குறையும் குடிநீரின் தரமும்தான் இப்போதைக்கு இந்தியாவில் மக்களை வாட்டிவதைக்கும் பேரிடர்களாக உள்ளன. நாட்டில் கங்கை, யமுனை, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, காவிரி போன்ற பல வற்றாத நதிகள் இருந்தாலும்கூட தேசிய அளவில் தண்ணீர் நெருக்கடியானது பரவலாகக் காணப்படுகிறது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் மற்றும் வேதிமக் கழிவுகளால், நிலத்தடி நீரும் மேற்பரப்பு நீரும் மாசுபடுத்தப்படுவது கவலைக்குரியதாகும். இந்நிலையில் குழாய்த் தண்ணீரின் தரம் குறித்து நம்பகத்தன்மை இல்லாமல், குடிநீரை விலைக்கு வாங்குவதையே மக்கள் விரும்புகிறார்கள். அதாவது, அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும்கூட அதையே அவர்கள் நாடுகிறார்கள்.

சவ்வூடு பரவல் (Reverse Osmosis) மூலம் சுத்திகரிக்கப்படும் - சுருக்கமாக, ’சவ்வூடு தண்ணீர்’ விற்பனை மையங்கள், அளவுக்கதிகமான கேன்களை சந்தையில் இறக்கிவிட்டு, மக்களின் குடிநீர்த் தேவையையும் குழாய்த்தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான விருப்பமின்மையையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, சவ்வூடு தண்ணீர் வர்த்தகத்தை ஏற்படுத்திக்கொண்டன. இந்த மையங்கள், பெரும்பாலும் ஆரோக்கியமான நிலைமையில் நடத்தப்படுவதில்லை; மாசுகலந்த நீரையோ அல்லது குழாய்த் தண்ணீரையோதான் குடுவையிலிட்டு விளம்பரம்செய்து விற்கின்றன. இந்த மோசடிக்கு முடிவுகட்டும்விதமாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது சட்டவிரோத குடிநீர் ஆலைகள் தொடர்பாக அண்மையில் சீற்றத்தை வெளிப்படுத்தியது.

மைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் இது தொடர்பாக முக்கிய ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. சவ்வூடு தண்ணீர் ஆலைகளால் 60% அளவுக்காவது சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தரமுடியாதபோது, அவற்றை டிசம்பர் 31-க்குள் மூடாவிட்டால், உரிய அதிகாரிகளின் ஊதியத்தில் பிடித்தம்செய்யவேண்டும் என்பதுதான், அந்த ஆணை. மேலும், எந்தப் பகுதி தண்ணீரில், கரையக்கூடிய மொத்த உப்புகளின் அடர்த்தியானது லிட்டருக்கு 500 மி.கி.க்குக் குறைவாக இருக்கிறதோ அங்கு தண்ணீர் ஆலைகள் மூடப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. உடனே, சவ்வூடு தண்ணீர் ஆலைகள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இதற்குத் தடைகோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட துறையுடன் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்படவேண்டும் என நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

எவ்வாறாக இருப்பினும், நம் அன்றாடத் தேவையிலிருந்து சவ்வூடு தண்ணீரை முற்றிலுமாக விலக்கிவைப்பது என்பது ஆகாத காரியம். அந்த அளவுக்கு மக்கள் சவ்வூடு தண்ணீரைச் சார்ந்து இருக்கப் பழகிவிட்டனர். ஏனென்றால், குழாய்த் தண்ணீரானது சில இடங்களில் மாசுகலந்தும் சில இடங்களில் ஆபத்தான புளூரைடு மற்றும் உலோகப் படிவுகள் கலந்து மோசமானநிலையிலும் பேராபத்து விளைவிப்பதாகவும் இருக்கிறது. காட்டாக, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரியில் குடிநீர், பாசன நீர் இரண்டுமே, வேதி உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், இறால்பண்ணைகள் வெளியேற்றும் கழிவுகள் ஆகியவற்றால் மாசடைந்துவிட்டது. இதனால், உவர் நீரானது மீன் வளர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. அந்தப் பகுதியில் சவ்வூடு பரவல் மூலம் நீரானது சுத்திகரிக்கப்படாததால் பயன்படுத்தமுடியாதபடி இருக்கிறது.

நம்பகமில்லாத குழாய்த் தண்ணீர்:

குடுவைகள், கலன்களில் தண்ணீரின் தோற்றத்தை வைத்து, அது தூய்மையானது என்பதற்கு உறுதிப்பாடு இல்லை. நீரில் உள்ள அல்கலைன் தன்மை, அமிலத்தன்மை, கன உலோகங்களின் செறிவு ஆகியவற்றை ஆய்வுகள் மூலமாகவே கண்டறியமுடியும்; சும்மா கண்ணால் பார்த்துமட்டுமே அதன் தரத்தைத் தீர்மானித்துவிடமுடியாது. ஆகையால், பொதுவான நுகர்வோரைப் பொறுத்தவரையில், இந்தியத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் தரக்குறியீட்டுக்கு உள்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரா அல்லது சாதாரண சவ்வூடு பரவல் இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரா என்பதை அறியுமளவுக்கு பெரிய வேறுபாடு இல்லை.

சுவை, தரத்தைத் தவிர்த்துவிட்டால் இரண்டும் ஒன்றுபோலத்தான் இருக்கும். இந்த சூழலானது சவ்வூடு தண்ணீர் ஆலைக்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. மைய, மாநில அரசுகள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதற்காக எத்தனை ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும், அது பொதுமக்களுக்கு பயன்படுவதாக இல்லை. விளைவு, மக்கள் தனியார் ஆலைகளால் வழங்கப்படும் சவ்வூடு தண்ணீரின் பக்கம் திரும்பிவிடுகின்றனர்.

ஊரகமோ நகரமோ குழாய் மூலம் அரசாங்கத்தால் வழங்கப்படும் குடிநீரானது போதுமான அளவுக்கு தரமாகவும் இருப்பதில்லை. இதனாலும் மக்கள் சவ்வூடு தண்ணீரை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் இப்படிச் செய்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் பரந்த அளவு, குடிநீர்த் தேக்கங்களும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டங்களும் தவறான நிர்வாகத்தால் மோசமடைந்துகொண்டிருக்கின்றன.

நீர்த்தேக்கங்களும் தொட்டிகளும் குறிப்பிட்ட காலத்தில் சுத்தம்செய்யப்படுவதில்லை; கசிவுகளும் உரியபடி பராமரிக்கப்படுவதில்லை. இவை இரண்டுமே குழாய்த்தண்ணீரானது மாசடைவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும். உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களால் செய்யப்படும் சுத்திகரிப்பு என்பது குடிநீரில் குளோரின் தூளைச் சேர்ப்பதுதான்; அதை அப்படியே வீடுகளுக்குச் செல்லும் குழாய்களில் விநியோகம் செய்துவிடுகிறார்கள்.

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலமானது பிரிக்கப்படுவதற்கு முன்னரும் 2014-க்குப் பிறகும், இரண்டு மாநிலங்களிலும் குடிநீர் வழங்கல் சோதனைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. பல மாநகரங்கள், நகரங்களில் 30-40 ஆண்டுகளுக்கு முன்னதாகப் போடப்பட்ட குழாய்கள் எல்லாம் இப்போது துருப்பிடித்து மோசமாக அரிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இந்தக் குழாய்களை ஒட்டியே வடிகால் மற்றும் கழிவுநீர்க் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளதால், குடிநீரானது மாசடைந்துள்ளது.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் புதைகுழாய்கள் மாற்றப்படவேண்டும் என்றாலும், அதற்கு ஆகும் செலவு காரணமாக, அரசாங்கங்கள் அதைப் பற்றி அக்கறையே கொள்வதில்லை. இதன் விளைவு, அரசாங்கத்தால் வழங்கப்படும் குடிநீரைப் பயன்படுத்தவிடாதபடி மக்கள் தடுக்கப்படுகின்றனர். செலவு வைக்கும் என்றாலும் குழாய்த் தண்ணீரை விட்டுவிட்டு மக்கள் குடுவைத்தண்ணீரையே விரும்புகின்றனர்.

ஜெர்மனி, ரசியா மற்றும் அமெரிக்காவில், சவ்வூடு பரவல் சுத்திகரிப்புத் தண்ணீருக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கு யாரும் ஊக்குவிப்பதில்லை. ஆனால் இந்தியாவிலோ காளான்களைப் போல சவ்வூடு தண்ணீர் ஆலைகள் பரவிக்கொண்டிருக்கின்றன. காரணம், இந்த ஆலைகளை உரியபடி கண்காணிப்பதில்லை என்பதால் அன்றாடம் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாக மாறிவிட்டது.

தெலுங்கு பேசும் மாநிலங்களில் தண்ணீர் ஆலைகள் மீதான கட்டுப்பாடு இல்லாமல் கணக்கில்லாத அளவுக்கு அவை பெருகிவிட்டன. இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 18 ஆயிரம் சவ்வூடு சுத்திகரிப்பு ஆலைகள் இருப்பதாகவும் அவற்றில் 90 விழுக்காடு ஆலைகள் அனுமதிபெறாதவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் தொண்டையைத் தழுவிச்செல்லும் தண்ணீருக்குள் அவர்களுக்குத் தெரியாமல் கேடுபயக்கும் நுண்ணுயிரிகளும் உள்ளேபோகின்றன.

இந்தியத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளுக்கு அமைய, சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்கு 25 இலட்சம் முதல் 30 இலட்சம்வரை செலவாகும். அப்படி அமைக்கப்பட்டால், 20 லிட்டர் குடிநீர்க்கலன் ஒன்றுக்கு ரூ.30வரை விலைவைக்கமுடியும். இவ்வளவு தொகையை மக்கள் விரும்பாததால், குறைவாக, 4 - 5 இலட்சம் ரூபாய் அளவில் சுத்திகரிப்பு ஆலையை அமைத்து, தரம்குறைந்த இயந்திரங்கள் மூலம் ஓரளவுக்கே பதப்படுத்தி குறைந்த அளவே சுத்திகரித்த நீரை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குகின்றனர். இந்தத் தண்ணீரில் எந்த தாது உப்பும் இருப்பதில்லை; விலையும் குறைவாக வைக்கப்படுகிறது.

ஆனால், பொதுமக்கள் குறைந்தவிலையில் தரமான குடிநீரை வாங்குவதாக நினைத்துக்கொள்கின்றனர். தண்ணீரை வைத்து வர்த்தகம் செய்யவேண்டும் என்றால், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுடன் குறிப்பாக, தரக்கட்டுப்பாட்டு அமைப்பில் பதிவு, ஆய்வக வசதி, ஆலைக்குள் மருந்தாளுநர் வசதி, நுண்ணியிரியியலாளர் ஆகியோருடன் நான்கு பணியாளர்களும் இருந்தாகவேண்டும் என்பன உள்பட வேறு பல காரணங்களும் உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயமாக ஆய்வுசெய்யப்பட வேண்டும். இந்தியத் தரக்கட்டுப்பாட்டுக்கு அமைய உப்புகளும் தாதுக்களும் இருந்தால் மட்டுமே தண்ணீரானது குடுவைகள், கலன்களில் அடைக்கப்படவேண்டும். நீரை நிரப்பும் நாளை கலன்களில் ஒட்டிவைக்க வேண்டும். இயந்திரங்களில் உள்ள வடிகட்டிகளும் சுத்திகரிக்கப் பயன்படும் சவ்வூடு நீரின் அடர்த்தியாலும் மாசுகளாலும் சேதமடையும் என்பதால், அவற்றை அடிக்கடி மாற்றவேண்டும். ஒவ்வொரு 10 ஆயிரம் லிட்டருக்கு ஒரு முறையாவது புதிய வடிகட்டிகளைப் பயன்படுத்தவேண்டும். இவையெல்லாம் இருந்தாலும், வியாபாரிகளைப் பொறுத்தவரை அரசாங்கத்துக்கு சேவைவரி கட்டுவதைப் பற்றிய யோசனைகூட இல்லாமல், குடிநீரின் தரத்தைப் பற்றிக் கவலையின்றி கட்டுத்தளையின்றி விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

மழைநீர் ஒன்றே தற்போதைய சூழலுக்கு ஒரே தீர்வு. ஆழ்குழாய்க் கிணற்றுத் தண்ணீரில் மாசுகளும், அல்கலைன் மற்றும் அமிலச் சாரமும் கலந்து கெட்டுப்போயிருப்பதாலும் நீர்மட்டம் ஆழமாகப் போய்க்கொண்டே இருப்பதாலும் அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்துமே இயற்கையான நீர்நிலைகள் மாசடைவதற்குக் காரணமாக அமைகின்றன. இப்படியான சூழலில், மழைநீர் ஒன்று மட்டுமே தீர்வாக இருக்கமுடியும். நிலத்தடி நீர் கெட்டுப்போகும் நிலையில் மழைநீரைச் சேமிப்பது மட்டுமே இதுதான் மிகச்சரியானது.

மழைநீரை நிலத்திற்குள் மீண்டும் விடுவது என்பது நிலத்தடி நீரின் அல்கலைன் தன்மையைக் குறைக்க உதவும். அந்தத் தண்ணீரை பதப்படுத்தி குடிக்கப் பயன்படுத்தமுடியும். அரசாங்கத்தின் பங்கானது இதில் முதன்மையானது. தோட்டங்களில் மறு ஊட்ட ஆழ்குழாய்க் கிணறுகளும் வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளும் அமைக்க மானியம் வழங்கவேண்டும்.

தண்ணீரில் கரையக்கூடிய மொத்த உப்புகளின் அளவு 300 மி.கி.க்கும் குறைவாக இருந்தால், ஊரகம், நகரம், மாநகரம் எல்லா இடங்களிலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் தண்ணீரை கொதிக்கவைத்து அருந்துவதே சிறந்ததாகும். சவ்வூடு தண்ணீரானது தரக்கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டிருக்கவேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

சவ்வூடு தண்ணீர் ஆலைகள் அமைக்கவும் கட்டுப்படுத்தவும் கறாரான ஒழுங்குமுறைகள் வகுக்கப்படவேண்டும். தரக்கட்டுப்பாட்டுக்கு அமைய போதுமான இடம், இயந்திரங்கள், பணியாளர்கள், பதப்படுத்தல் வசதி இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படவேண்டும். ஊராட்சி, வருவாய் மற்றும் நீர்வளத் துறைகள் ஆகியவை நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைக் கண்காணிப்பதை உறுதிசெய்யவேண்டும்.

உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் குளங்கள், அடிகுழாய்கள், கிணறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் மாதம்தோறும் கரையக்கூடிய உப்பு, அமிலக்காரத்தன்மை ஆகியவை குறித்து ஆய்வுசெய்யவேண்டும். ஒருவேளை அளவை மீறி வேதிமங்களும் அபாயம்தரும் பொருள்களும் கலந்திருப்பது கண்டறியப்படும்போது, அதைப் பற்றி பொதுமக்கள் அறியும்படியாக அறிவிப்புசெய்வதற்கான ஏற்பாடும் அவசியம். தண்ணீரில் பாதரசம், ஆர்சனிக், புளூரைடு கூறுகள் அதிகமாக இருந்தால், அந்தத் தண்ணீரைக் குடிப்பதற்கு தடைவிதிகக்பப்டவேண்டும்.

அபாயமான எதிர்காலம்:

குடிநீரில் கால்சியம், மக்னீசியம், இரும்பு மற்றும் இரும்பல்லாத தாதுக்கள் குறிப்பிட்ட அளவில் இருக்கவேண்டும். உணவு மற்றும் தண்ணீரின் மூலம் இந்த சத்துகள் உடலுக்கு அளிக்கப்படுகின்றன. ஆனாலும் இது அதிகமானால் அதுவும் நலத்துக்கு ஆகாது. கரையக்கூடிய மொத்த உப்பின் அளவானது, 300 - 500 மி.கி./ லி. அளவுக்குள்ளும் ஹைட்ரஜனின் அளவு 7%-க்குள்ளும் இருக்கவேண்டும்.

ஆனால், சவ்வூடுபரவல் முறையில் நுண்செயலி மூலம் சுத்திகரிக்கப்படும்போது, நுண்ணுயிரிகள் மற்றும் மாசுகளோடு சேர்த்து தாதுகளும் போய்விடுகின்றன. கரையக்கூடிய மொத்த உப்பின் அளவு பரிந்துரைக்கப்பட்ட 100 அளவுக்குக் குறைவாகிவிடும். ஊரக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, இதேநிலைமை கண்டறியப்பட்டது. நாட்டின் பல்வேறு நீர்ச்சுத்திகரிப்பு மையங்களில் எடுக்கப்பட்ட நீர்மாதிரிகளில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு குறைவாக இருப்பது தெரியவந்தது.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரானது பல நாள்களாக வைத்துப் பார்க்கப்பட்டபோது, அது கெட்டுப்போயிருந்தது. நிறைய ஆலைகளில் ஆரோக்கியமில்லாத சுற்றத்தாலும் தூய்மைப்படுத்தப்படாத கலன்களாலும், தொட்டிகளின் அசுத்தத்தாலும் நிறைய நுண்ணுயிரிகள் உருவாகியிருந்தன. இந்த சவ்வூடுபரவல் சுத்திகரிப்பில் கடைப்பிடிக்கப்படும் பல செயல்முறைகளால் மனித உறுப்புகளை பாதிக்கும்நிலை ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கைவிடுத்திருப்பது, குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இயக்குநர் அவதாரமெடுக்கும் எஸ்.பி.பி. சரண்

Intro:Body:

How Pure is the Water We Drink??


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.