ETV Bharat / bharat

என்னை பதவி விலக சொல்பவர்கள்  யார் தெரியுமா? - ஜெகதீஸ் குமார்

author img

By

Published : Jan 15, 2020, 3:21 PM IST

பல்கலைக்கழகத்தில் நான் கொண்டு வந்த மாற்றங்களை விரும்பாதவர்களே நான் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள் என மமிதாலா ஜெகதீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

JNU Vice Chancellor
JNU Vice Chancellor

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) வளாகத்தில் பருவநிலை (செமஸ்டர்) தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் ஜனவரி 5ஆம் தேதி அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்த முகமூடி கும்பல் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவத்தில், ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், ஆசிரியர்கள் உள்பட 50 பேர் காயமடைந்தனர். இது நாடெங்கிலும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக துணை வேந்தர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் அவர் நமது செய்தியாளருக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

பெரும்பான்மையான மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தங்கள் வேலையை மட்டுமே கவனித்துவருகிறார்கள். ஒரு சிலரே பல்கலைக்கழகத்திற்கு கெட்ட பெயர் உருவாக்கி தர முயல்கிறார்கள் என துணை வேந்தர் மமிதாலா ஜெகதீஸ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் நிதி நிலை குறித்து மாணவர்களிடம் தெரிவித்த பிறகும் கூட இரண்டு மாதங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர் என துணை வேந்தர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "தண்ணீர், மின்சாரம் போன்ற சேவைகளுக்கு பல்கலைக்கழகமே செலவிட வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்திருந்தது. மாணவர்கள், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவையுடன் கருத்து கேட்ட பிறகு அந்த செலவுகளை பல்கலைக்கழக மானியக் குழு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். சேவை கட்டணத்தை குறைத்தோம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு 150 ரூபாய் விடுதி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஏற்றார்போல் பல நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும், சில மாணவர்கள் மற்றவர்களை வகுப்புக்கு செல்லவிடாமல் தடுத்தி நிறுத்தியுள்ளனர். இது சரியல்ல, பல்கலைக்கழகத்தை செயல்படாமல் நிறுத்திவைப்பதற்கு அவர்களுக்கு உரிமையில்லை.

JNU Vice Chancellor
மமிதாலா ஜெகதீஸ் குமார்

செய்தி நிறுவனங்களின் இலக்காக ஜேஎன்யு மாறுவதை விரும்பவில்லை. உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஜேஎன்யு இடம்பெற வேண்டும் என்பதே எனது கனவு. சர்ச்சையை விரும்பவில்லை. சில மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களின் பொறுப்புகளை தட்டிக்கழித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 2016ஆம் ஆண்டு, நான் தலைமை பதவிக்கு வந்த பிறகு பல்கலைக்கழகத்தில் சில மாற்றங்கள் கொண்டுவர முனைந்தேன். நான் ராஜினாமா செய்ய வேண்டும் என சிலர் கோரிக்கை விடுப்பதற்கு இதுவே காரணம். அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பில்லை என நான் நினைக்கிறேன். அவர்கள் கோரிக்கை முன்வைப்பதற்கு உரிமையுண்டு. ஆனால், நான் என் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன்" என்றார்.

மாணவர்கள் எளிதாக உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்த உங்கள் கருத்து என்ன என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "படிநிலை குறித்து மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து மட்டத்திலும் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாதத்தின் முதல் திங்கட்கிழமைகளில் முன் அனுமதி இல்லாமல் மாணவர்கள் என்னை அணுகலாம். மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமைகளில் ஆசிரியர்களும் மூன்றாவது திங்கட்கிழமைகளில் மற்ற பல்கலைக்கழக பணியாளர்கள் என்னை அணுகலாம். குளிர்கால செமஸ்டர் தேர்வுகளுக்கான பதிவை தடுப்பதற்காக சில மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பொய் பரப்புரையை மேற்கொண்டுவருகின்றனர். ஜனவரி மாதம் 3ஆம் தேதி, முகமூடி அணிந்த சிலர் தகவல் மையத்தை சேதப்படுத்த முயற்சித்தனர். இதுகுறித்த டெல்லி காவல்துறையினர் மேற்கொண்டுவரும் விசாரணை முடிவடைந்த பிறகே முடிவு எடுக்கப்படும்" என பதிலளித்தார்.

JNU Vice Chancellor
ஜேஎன்யூ மாணவர்கள் சங்க தலைவர் ஆயிஷ் கோஷ்

ஜனவரி 5ஆம் தேதி தாக்குதல் சம்பவம் நடைபெற்றபிறகு காவல்துறையினரை அழைப்பதில் நீங்கள் தாமதம் செய்தீர்கள் என குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது என செய்தியாளர் கேட்டதற்கு, "வன்முறை குறித்து தகவல் கிடைத்த பிறகு நிலைமையை புரிந்து கொண்டேன். உடனடியாக சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பினேன். அவர்கள் சென்ற பிறகுதான் நிலைமை அங்கு மோசமாக இருப்பது தெரியவந்தது. பின்னர், காவல் ஆணையர், துணை காவல் ஆணையர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். சூழ்நிலை ஆராய்ந்த பிறகே முடிவு எடுக்கப்படும். பதட்டத்துடன் காவலர்களை அழைக்க வேண்டாம் என நினைத்தேன். பல்கலைக்கழக பாதுகாவலர்களை வைத்து சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியுமா என்பதை ஆராய வேண்டும். சூழ்நிலை கைவிட்டு போன பிறகுதான் காவலர்களை அழைக்க வேண்டும்" என்றார்.

பல்கலைக்கழகத்தில் ஏன் பாதுகாவலர்கள் குறைக்கப்பட்டார்கள் என செய்தியாளர் கேட்டதற்கு, "தணிக்கைக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. செலவுகள் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்பட்டது. நான் பொறுப்பேற்றதிலிருந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன்.

JNU Vice Chancellor
மமிதாலா ஜெகதீஸ் குமார்

நிர்வாகத்தின் முன் அனைத்து மாணவர்களும் சமம். அனைத்து மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன். ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். இதில், இருக்கும் சவால்களை நான் அறிவேன். கல்வி குறித்த செயல்பாடுகளை நாம் விரிவுப்படுத்தவில்லை எனில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஜேஎன்யுவை காண முடியாது.

ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டும். பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களாக இருந்தாலும் சரி பெரிய புள்ளிகளாக இருந்தாலும் சரி எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். பெரும்பாலான மாணவர்கள் படிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு உரிமை இல்லையா? நீங்கள் ஏன் அவர்களை கருத்தில் கொள்ள மறுக்குறீர்கள்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜே.என்.யூ. வன்முறை: 49 பேருக்கு டெல்லி காவல் துறை நோட்டீஸ்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.