புதுச்சேரியில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மது அருந்தியும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை பயன்படுத்தியும் புதிய புதிய ரவுடிகள் உருவாகி வந்தவண்ணம் இருக்கின்றனர்.
இதனால் காவல்துறையினருக்கு பெரிய தலைவலி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வில்லியனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட அகரம் பகுதியில் பொதுவெளியில் 10 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல்கிடைத்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் குமார் தலைமையிலான காவலர்கள் சம்பவஇடத்திற்கு சென்று அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கும்பல் மது அருந்திவிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரியிவந்தது. இதனையடுத்து அந்தக் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றச் செயல்கள் நடக்கும் முன் தடுத்து நிறுத்திய வில்லியனூர் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வில்லியனூர் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லியனூர் மார்கெட், நான்கு மாட வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த கடைகள், இருசக்கரவாகனங்களை அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தினர்.
வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலை, கோட்டைமேடு, ஆரியப்பாளையம், கூடப்பாக்கம் குளக்கரை, சேந்தநத்தம், உளவாய்க்கால், அகரம், பத்துக்கண்ணு பகுதிகளுக்கு காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்ட போது திறந்தவௌி, குடியிருப்புகள் அருகில் பொதுமக்களுக்கு இடையூராகவும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் மது அருந்திக்கொண்டிருந்தவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் பயந்துப் போன மதுப்பிரியர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
பின் மேற்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ரங்கநாதன் அப்பகுதியில் செயல்படும் மதுக்கடை ஊழியர்களிடம் மதுக்கடை அருகே யாரும் மது அருந்த கூடாது. மதுவாங்க வருபவர்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் மதுக்கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
குற்றசெயல்களில் ஈடுபடுவர்கள் அதற்கு முன் மது, கஞ்சா போன்றவற்றை எடுத்து கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கடந்த சில நாள்களாக பொதுஇடங்களில் மது அருந்துபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.