இந்திய - மியான்மர் எல்லை வழியாகக் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள், டெல்லி ரயில் நிலைத்தில் இன்று (ஆக. 29) பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வருவாய் நுண்ணறிவுப் பிரிவு இயக்குனரகம் (டி.ஆர்.ஐ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, டெல்லி - திபுர்ஹா செல்லும் ராஜ்தானி அதிவிரைவு வண்டியில் எட்டு பேர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக டி.ஆர்.ஐக்கு துப்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, அங்கு விரைந்த அலுவலர்கள் வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட 504 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து, அந்த எட்டு பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில் இந்தத் தங்கக் கட்டிகள், இந்தோ - மியான்மர் எல்லை வழியே கடத்தி வரப்பட்டது தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்த தங்கத்தின் மதிப்பு சுமார் 43 கோடி ரூபாய் எனவும், அவற்றின் மொத்த எடை 83.621 கிலோ எனவும் டி.ஆர்.ஐ தரப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய அலுவலர்கள், அவர்களை விசாரணைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி; வெடிபொருள்களுடன் ஐ.எஸ். பயங்கரவாதி கைது!