பெங்களூரு (கர்நாடகா): பெங்களூரு ஆர்டி நகரில் அமைந்துள்ள ஆத்மானந்தா காலனியில் நேற்று (அக்.12) மாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கு கணக்கில் வராத சொத்துக்களைக் கண்டு தடுமாறினர்.
வருமான வரித்துறை சோதனை நடந்த ப்ளாட் பெங்களூரில் ஒப்பந்ததாரருக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது. அவரது மனைவி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் என கூறப்படுகிறது. அந்த ப்ளாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு அறையின் படுக்கைக்கு கூழ் அட்டைப்பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
அட்டைப்பெட்டிகளில் வைத்து படுக்கைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த ரூ. 42 கோடி பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் சுமார் பத்து இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த சோதனையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சர்ஜாபூர் அருகே உள்ள முள்ளூர், RMV விரிவாக்கம், BEL சர்கிள், மல்லேஸ்வரம், டாலர்ஸ் காலனி, சதாசிவநகர் மற்றும் மட்டிகேரி ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் இந்த வருமான வரித்துறை சோதனை சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனைகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் டி.கெம்பண்ணா கூறுகையில், “அவர் பல ஆண்டுகளாக ஒப்பந்ததாரராக பணிபுரியவில்லை. ஐடி ரெய்டு குறித்து எனக்கு சரியான தகவல் இல்லை. நான் காலையில் டிவி கூட பார்ப்பதில்லை. அவர்களுக்கு விவசாயம், கிரஷர் உள்ளிட்ட பல தொழில்களும் உள்ளன” எனத் தெரிவித்தார்.
இந்த சோதனை குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ அஸ்வத்தநாராயணன், “ஒப்பந்ததாரர் வீட்டிற்கு பில் பாக்கி செலுத்த பணமின்றி தவிக்கும் போது, அவரது வீட்டில் கோடிக்கணக்கில் பணம் வந்தது எப்படி என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு எப்படி 42 கோடி பணம் கிடைத்தது? இந்த பணத்தின் ஆதாரம் குறித்து விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், ஐந்து மாநில தேர்தல்களுக்கு மாநில காங்கிரஸ் அரசு நிதியுதவி செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில்தான் தற்போது ரெய்டு நடந்துள்ளது எனவும் அஸ்வத்தநாராயணன் குற்றம்சாட்டினார்.
இந்த சோதனை குறித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, “எம்.எல்.ஏ., முனிரத்னாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து நான் கருத்து கூற மாட்டேன். நீங்கள் அதை கண்டீர்களா? முனிரத்னா பார்த்தாரா? எல்லோரும் குற்றம் சொல்லலாம். அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. பா.ஜ., எம்.எல்.ஏ.,வின் குற்றச்சாட்டு உண்மை இல்லை,'' எனத் தெரிவித்தார்.
எச்.டி.குமாரசாமி இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து அவரது X சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஐடி ரெய்டின் போது காண்ட்ராக்டரின் உறவினர் வீட்டில் சிக்கிய பணம் யாருடையது? தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பிபிஎம்பி மூலம் ரூ.650 கோடி விடுவிக்கப்பட்ட பிறகு இந்த ரூ.42 கோடி ஐடி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. 23 பெட்டிகளில் அடைக்கப்பட்ட பணம் அண்டை மாநிலமான தெலுங்கானாவுக்கு செல்வதாக தகவல் உள்ளது.
எனவே இந்த பணம் தேர்தலுக்காக வசூல் செய்யப்பட்டது என்பது உண்மை. 42 கோடியில் என்ன விசாரணை நடத்தப்படும் என்பதை சித்தராமையா சொல்ல வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “அரசியல் உள்நோக்கம் இல்லாமல், நாட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்காது. ஐந்து மாநில தேர்தலுக்கு கர்நாடகாவில் இருந்து பணம் அனுப்பப்படுவதாக முன்னாள் அமைச்சர் அஸ்வத்தநாராயணா கூறியது குறித்து கேட்டதற்கு, “தெருவில் நடப்பவர்களுக்கு பதில் சொல்வதில்லை” என்று சிவக்குமார் கூறினார். பிபிஎம்பி மூலம் வழங்கப்பட்ட 650 கோடி மானியத்தில் இருந்து பெறப்பட்ட கமிஷன் பணம் ஒப்பந்ததாரர் மூலம் அனுப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, சிவக்குமார், ''இந்த விஷயம் எனக்கு தெரியாது'' என்றார்.