ETV Bharat / bharat

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி பிணை கோரிய மனு மீது இன்று விசாரணை!

author img

By

Published : Nov 5, 2020, 1:25 PM IST

மும்பை: தன்னை மீதான கைது நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும், பிணை கோரியும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த மனு இன்று(நவ.,5) மதியம் விசாரணைக்கு வருகிறது.

Arnab
Arnab

கடந்த 2018-ம் ஆண்டு அலிபாக் பகுதியைச் சேர்ந்த கட்டட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் அவரது தாயாருடன் தற்கொலை செய்துகொண்டார். அந்த சம்பவத்தின் போது கிடைத்தக் கடிதத்தில், ரிபப்ளிக் தொலைக்காட்சி தனக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பித் தராத காரணத்தால், தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அன்வே நாயக்கின் மகள் அத்நயா நாயக் காவல் துறையில் அளித்தப் புகாரின் அடிப்படையில், இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. முன்னதாக, டிஆர்பி முறைகேட்டில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஈடுபட்டதாக மும்பை காவல் துறை குற்றம்சாட்டியுள்ள நிலையில், தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல் துறை நேற்று (நவ.04) கைது செய்தது. இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்தும், பிணை கோரியும் அர்னாப்பின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அர்னாப் மீதான கைது நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும், முடிந்து போன வழக்கைத் தோண்டி எடுத்து சட்ட விரோதமாகக் கைது செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மீது தொடரப்பட்ட தற்கொலைக்குத் தூண்டிய வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனு இன்று மதியம் நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது நண்பர் இருவர் மீதும் வரும் 18ஆம் தேதி வரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அர்னாப் கோஸ்வாமி, அலிபாக் சிறைக்கைதிகளுக்காக பள்ளியில் அமைகப்பட்டுள்ள கரோனா மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.