ETV Bharat / bharat

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்துகிறதா பாஜக அரசு?

author img

By

Published : Aug 20, 2022, 5:23 PM IST

Saffron
Saffron

மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை குறித்து காண்போம்.

டெல்லி: மதுபான உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் (ஆக.18) டெல்லி துணை முதலமைச்சரும், ஆம்ஆத்மி மூத்த தலைவருமான மனிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை குறிவைத்து மத்திய பாஜக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மத்திய ஏஜென்சிகள் மீதான இந்த குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த மத்திய ஏஜென்சிகளை பாஜக அரசு பயன்படுத்துவதாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, கடந்தாண்டு ஏப்ரல் 2ஆம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி உள்ளிட்டோர் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தபோது, சாரதா சிட் ஃபண்ட்ஸ் நிதி முறைகேடு தொடர்பாக மதன் மித்ரா, விவேக் குப்தா ஆகிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அதில் மதன் மித்ரா கைது செய்யப்பட்டார். அதே வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், சதாப்தி ராய், தேப்ஜானி முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

இதேபோல், கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சர் பினராயி விஜயனின் வற்புறுத்தலின் பேரில் இந்த குற்றத்தை செய்ததாக அமலாக்கத்துறை கூறியது. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிலரை முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக சாட்சியமளிக்க வற்புறுத்தியதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மாநில குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

2020ஆம் அக்டோபரில், காஷ்மீரில் குப்கர் கூட்டணியை உருவாக்குவதாக அறிவித்த நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜம்முவில் நிதி மோசடி தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அக்டோபர் 2020-ல், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்புடைய 14 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

ராஜஸ்தானில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, உர ஊழல் தொடர்பாக கெலாட்டின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, மாநில கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அவரது மருமகன் அஜித்பவார் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்தது.

இப்படி பெரும்பாலான எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில், இக்கட்டான சூழ்நிலைகளில் மத்திய ஏஜென்சிகள் சோதனை நடத்தியுள்ளன. அதேநேரம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளில் இருந்து பிரிந்து, பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவில்லை. இந்த நிகழ்வுகள் மற்றும் தரவுகளின் படி, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இருப்பினும் சோதனைக்களுக்கு உள்ளாகும் அரசியல் பிரமுகர்களும், அவர்களுக்கு தொடர்புடையவர்களும் ஊழலில் ஈடுபடவில்லை என்பதற்கான சாட்சிகளும் இல்லை.

இதையும் படிங்க: பாலிவுட்டை மிஞ்சும் பயங்கரவாத ஜோடியின் காதல் கதை... கலவரம் முதல் குழந்தை வரை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.