ETV Bharat / bharat

பாலிவுட்டை மிஞ்சும் பயங்கரவாத ஜோடியின் காதல் கதை... கலவரம் முதல் குழந்தை வரை...

author img

By

Published : Aug 20, 2022, 1:58 PM IST

கேஎல்ஓ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கைலாஷ் - ஜூக்லி ஜோடி, தற்போது காவல் துறையிடம் சரணடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடிவெடுத்துள்ளனர்.

பாலிவுட்டை மிஞ்சும் பயங்கரவாத ஜோடியின் காதல் கதை
பாலிவுட்டை மிஞ்சும் பயங்கரவாத ஜோடியின் காதல் கதை

கொல்கத்தா: பயங்கரவாத அமைப்பான கம்தாபூர் விடுதலை அமைப்பின் (KLO) பொதுச்செயலாளர் கைலாஷ் கோஷ் (எ) கேஷப் பார்மன் - ஜூக்லி கோஷ் (எ) ஸ்வப்னா பார்மன் ஆகியோரின் காதல் வாழ்வு, திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு சுவாரஸ்யமான கதையாகும். பயங்கரவாதத்தை கை கொண்ட அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (ஆக. 20) கொல்கத்தாவில் உள்ள மாநில காவல் துறை குடியிருப்பில் தங்களின் கைக்குழந்தையுடன் சரணடைந்தனர்.

அவர்களின் கையில் ஏந்தி வந்த குழந்தை புன்சிரிப்போடு காட்சியளித்தது. அந்த சிரிப்பு நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக பொதுவாழ்வுக்கு திரும்ப இந்த இணையர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்களின் காதல் ஒரு அழகான விபத்தில்தான் பூத்தது என்று கூற வேண்டும்.

காதலில் விழுந்த தருணம்: படிப்பில் கெட்டிக்காரரான ஜூக்லி வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். அதன்பின்னர், கேஎல்ஓ-வில் இணைந்து பயங்கரவாதிகளுக்கு உதவிகரமாக இருந்துள்ளார். பயங்கரவாத அமைப்பில் செயலாற்றியபோது, ஒருபுறம் செவிலியர் படிப்பை டிப்ளமோவில் நிறைவு செய்தார். பயங்கரவாத முகாமில் காயமடைந்து வருபவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதே அவரின் தலையாய பணியாக இருந்துள்ளது.

அப்படி ஒருநாள் காயமடைந்து வந்த கைலாஷை சந்தித்த ஜூக்லி முதல் பார்வையிலேயே காதலில் விழுந்தார். அதன்பின், இருவரும் கலவரத்திற்கும் நடுவிலும் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். 2013ஆம் ஆண்டு, பதுங்கியிருந்த அவர்களை அஸாம் ரைபிள் படையினர் சுற்றிவளைத்ததில், ஜூக்லி தனியாக அவர்களிடம் மாட்டிக்கொண்டார். மேலும் ஜூக்லி மணிப்பூர் முகாம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டார்.

ஆப்பரேஷன் காதலி: இதற்கடுத்து நடந்ததுதான், அக்மார்க் கமர்ஷியல் திரைப்படத்தின் மாஸ் சீன்களுக்கு ஒப்பானது. மணிப்பூர் முகாமில் இருந்த ஜூக்லியை பயங்கராவதிகள் 2014ஆம் ஆண்டில் மீட்டுச் சென்றனர். அந்த ஆப்பரேஷனுக்கு மூளதாரியாக இருந்தது, வேறுயாரு கைலாஷ்தான்!. தனது காதலியை எதிரியிடம் இருந்து காப்பற்ற காதலன் போட்ட மிரட்டலான ஸ்கெட்ச் என்று கூட சொல்லலாம். அந்த ஆண்டே அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். அதற்கு பின், அவர்கள் வங்கதேசம், நேபால், மியான்மரில் மறைந்திருந்து தங்களின் காதல் வாழ்வை கழித்து வந்தனர்.

திரைமறைவில் இருந்த அவர்கள், அந்த வாழ்வை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக போலீசிடம் தற்போது சரணடைந்துள்ளனர். அவர்களின் கையில் இருக்கும் அந்த குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கும், அமைதியான வாழ்வை எதிர்பார்த்தும் காத்திருக்கிறது, இந்த காதல் ஜோடி.

இதையும் படிங்க: மும்பைக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்... மீண்டும் நவம்பர் 26 தாக்குதலா...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.