ETV Bharat / bharat

சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி!

author img

By PTI

Published : Sep 22, 2023, 9:27 PM IST

Chandrababu Naidu Judicial Remand till Sept 24: இரு நாட்களும் (செப்.23 மற்றும் 24) சந்திரபாபு நாயுடுவை சிஜடி காவல் துறையினர் காலை 9 மணிக்கு தனது பாதுகாப்பில் எடுத்து விசாரணை செய்து, மீண்டும் மாலை 5 மணிக்கு சிறைக் காவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ap-hc-dismisses-plea-to-quash-fir-acb-court-extends-chandrababu-naidus-judicial-remand-till-sept-24
சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர சிஐடி காவல் துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, விஜயவாடா சிறப்பு நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. மேலும், ஜாமீன் மனுவையும் நிராகரித்த நீதிமன்றம், அவரது வீட்டுக் காவல் மனுவையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல் துறையினர் இரண்டு நாள் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் இன்று (செப்.22) அனுமதி அளித்துள்ளது. சிஐடி காவல் துறையினர் சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஓய் என் விவேகானந்தா கூறும்போது, செப்டம்பர் 23 மற்றும் 24 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் சந்திரபாபு நாயுடுவை காவல் துறை காவலில் வைக்க ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாட்களும் சந்திரபாபு நாயுடுவை சிஜடி காவல் துறையினர் காலை 9 மணிக்கு தனது பாதுகாப்பில் எடுத்து விசாரணை செய்து, மீண்டும் மாலை 5 மணிக்கு சிறைக் காவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், விசாரணையின்போது தவறாக நடத்தப்படவோ, துன்புறுத்தல் மற்றும் மூன்றாம் நிலை முறைகள் உட்படுத்தப்படவோக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜமகேந்திராவரம் மத்திய சிறைக்கு சிஜடி காவல் துறையினர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விசாரிக்கச் செல்ல வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியில் ரூ.300 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தற்போது நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், வழக்கை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: “மீண்டும் கோவையில் நிற்பேன்” - கமல்ஹாசன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.