ETV Bharat / bharat

Gyanvapi Mosque case: மசூதி நிர்வாகம் மனு தள்ளுபடி... அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : May 31, 2023, 6:53 PM IST

ஞானவாபி மசூதி வளாகத்தில் நாள்தோறும் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்த மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த சீராய்வு மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Mosque
Mosque

லக்னோ : ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் தாக்கல் செய்த மனுவை எதிர்த்து மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது. இந்த மசூதியை அஞ்சுமன் இன்டெஜாமியா குழு நிர்வகித்து வருகிறது. இந்த மசூதியின் வளாகத்தில் சிரிங்கர் கவுரி சன்னதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்கள் சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கவுரி சன்னதிக்கு தினமும் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி, 5 பெண்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு மசூதி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆய்வு முடிவில் மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற பொருள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த மசூதி நிர்வாகம், தொழுகைக்கு வருபவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட நீரூற்று என்றும் சிவலிங்கம் இல்லை என்றும் முறையிட்டது.

இதையடுத்து மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதேபோல் சிரிங்கர் கவுரி அம்மன் சிலையை நாள்தோறும் வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் தாக்கல் செய்த அலகாபாத் உயர் நிதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் தாக்கல் செய்த மனுவை எதிர்த்து மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

17 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, சிவபெருமானின் பிறப்பிடமாக இந்துக்களால் நம்பப்படும் இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மசூதி அமைந்து உள்ள இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என போராட்டம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து? தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு வரும் அடுத்த ஆபத்து?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.