ETV Bharat / bharat

சாதிவாரி கணக்கெடுப்பு நன்மை பயக்கும்- நிதிஷ் குமார்!

author img

By

Published : Aug 23, 2021, 5:37 PM IST

சாதிவாரி கணக்கெடுப்பு மாநிலம் மட்டுமல்ல நாட்டுக்கும் நன்மை பயக்கும் என பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

Bihar
Bihar

டெல்லி : பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி மாநிலத்தின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை (ஆக.23) சந்தித்தனர்.

இந்தக் குழுவில் அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய பின்னர் பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறுகையில், “சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை பிரதமரிடம் கூறினோம். அவர் எங்களது கருத்துகனை உன்னிப்பாக கவனித்தார். கவனமாக கேட்டுக்கொண்டார்.

எளிய மக்களுக்கு திட்டங்கள்

மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அரசாங்கத் திட்டங்களின் நன்மைகள் சமூகத்தின் பலவீனமான பிரிவுகளைச் சென்றடையும்.

இதில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரும் அடங்குவர், இது அவர்கள் வேகமாக வளர உதவும். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தாமதம் ஏற்படக்கூடாது. பலவீனமான சாதி பிரிவுகளின் உண்மையான எண்ணிக்கையின் அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

பதற்றம் ஏற்படுமா?

நாங்கள் பிகாரில் ஒருமனதாக இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.

இதைத் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தாது.

எதிர்க்கட்சிகள் உள்பட வலியுறுத்தல்

இதனை, மத்திய அரசு செய்யாவிட்டால் பிகார் அரசு சொந்தமாக நடத்த முயற்சிகள் எடுக்கும். இருப்பினும், மத்திய அரசு நாடு முழுவதும் அதை நடத்தும் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதலமைச்சர்கள் ஜிதன் ராம் மாஞ்சி மற்றும் அமைச்சர்கள் என பலர் இக்குழுவில் இருந்தனர். பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் விவகாரத்தை மாநில பாஜகவினரும் வரவேற்றுள்ளனர்.

இதையும் படிங்க : 'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி ஆணையம்' முதலமைச்சர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.