திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலை ஓரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த வகையில் கோவை - சேலம் 6 வழி தேசிய நெடுஞ்சாலையான பள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால், இரவு நேரத்தில் சாலைகளில் உள்ள பள்ளம் எது?, தண்ணீர் எதுவென வித்தியாசம் தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதற்கிடையே, சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கி சில வாகனங்கள் விபத்துக்குள்ளான நிலையில், தற்போது அப்பகுதியில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்காக வாகனங்கள் அனைத்தும் ஒரே சாலையில் திருப்பி விடப்பட்டது. இது தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் சென்னை - கேரளா பிரதான நெடுஞ்சாலை என்பதால், தொடர்ந்து இதுபோன்று சாலை துண்டிக்கப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.