சென்னை: மேற்கத்திய நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (The New Western Norway University) நூலகத்தைப் பார்வையிட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் தலைமை நிர்வாகிகளிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார்.
நார்வே நாட்டு ஆசிரியர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தும், தமிழ்நாட்டு ஆசிரியர்களை அந்நாட்டிற்கு அனுப்பியும் அறிவுசார் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் ஒன்றையும் முன் வைத்தார். அத்திட்டத்திற்கான ஒப்புதலை பெறும் முயற்சிகளில் ஈடுபடுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் திட்டங்கள் குறித்த புத்தகத்தை அவர்களிடம் வழங்கி, அத்திட்டங்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து, தமிழ்நாட்டிற்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். நார்வே நாட்டில் உள்ள பள்ளியின் வகுப்பறை, ஆய்வகங்களைப் பார்வையிட்டு, மாணவர்களோடு வகுப்பறையில் அமர்ந்து கற்பித்தல் முறையையும் பார்வையிட்டு, தமிழ்நாடு குறித்த அறிமுகத்தை மாணவர்களுக்கு வழங்கினார்.