75 வருடங்களில் முதல் முறையாக வேட்பாளரை கண்ட வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமம்.. - aiadmk candidate in Neknamalai
Published : Apr 1, 2024, 3:36 PM IST
திருப்பத்தூர்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சி வேட்பாளடர்களும், கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வாணியம்பாடி அருகே 75 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நெக்னாமலை மலை கிராமத்திற்கு சென்று வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மருத்துவர் பசுபதி போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் பசுபதி இன்று (ஏப்.1) திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சாலை வசதியே இல்லாத நெக்னாமலை கிராமத்திற்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். 75 ஆண்டு கால நெக்னாமலை வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்ததையடுத்து வேட்பாளர் பசுபதியிற்கு மலைகிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் மலைகிராம மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு, வெற்றி பெற்றவுடன் நெக்னாமலையிற்கு உடனடியாக தார் சாலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், இந்த வாக்குசேகரிப்பில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த நெக்னாமலை மலைகிராம மக்களுக்கு கடந்த ஜனவரி மாதம் சின்னத்திரை நடிகர் பாலா இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.