தருமபுரியில் பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்துச் செல்லும் தேரோட்டத் திருவிழா..
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Jan 27, 2024, 6:16 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-01-2024/640-480-20603627-thumbnail-16x9-temple.jpg)
தருமபுரி: குமாரசாமி பேட்டையில் உள்ள புகழ்பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலின் தைப்பூச திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கோலாகலமாகத் துவங்கிய இந்த திருவிழா கடந்த 7 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது.
இதில், குறிப்பாகப் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்கும் தேர்த் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், சிவசுப்பிரமணிய சாமி அலங்கரிக்கப்பட்ட தேரினை அரோகரா... கோஷமிட்டபடி ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர். மேலும், இந்த தேர் வீதி உலாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், இந்த தேர் வீதி உலா வரும் போது, பக்தர்கள் உப்பு, மிளகு, பொறி, முத்துக்கொட்டை உள்ளிட்டவற்றைத் தேர் மீது வீசி தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வழிப்பட்டனர். கோலாகலமாக நடந்த இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.