குழந்தைக்கு வாங்கிய கடலை மிட்டாயில் புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 9:55 AM IST

thumbnail

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், நேற்று முன்தினம் மன்னவராதி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சந்தனபிரபு தனது குழந்தைகளுக்காக பேக்கிங் செய்யப்பட்ட கடலை மிட்டாய் பாக்கெட் இரண்டு வாங்கி உள்ளார்.

இதன் பின்னர் வீட்டிற்குச் சென்று குழந்தைகளிடம் கொடுப்பதற்காகக் கடலை மிட்டாய் பாக்கெட்டை உடைத்த போது அதில் புழுக்கள் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்தனபிரபு, இது குறித்து டிபார்ட்மெண்ட்ஸ்டோருக்கு சென்று முறையிட்டுள்ளார்.

அப்போது அங்கும் பணியில் இருந்த ஊழியர்கள் அலட்சியமாகப் பதிலளித்ததுடன் வேறு ஒரு கடலை மிட்டாய்களைக் கொடுத்துள்ளனர். ஆனால், அதிலும் புழு இருந்துள்ளது, இதனை அறியாமல் குழந்தைகள் கடலை மிட்டாய்களைச் சாப்பிட்டதாகவும், இதனால், குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சந்தனபிரபு குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து டிபார்ட்மெண்ட்ஸ்டோருக்கு சென்று மீண்டும் முறையிட்ட போது, அங்கு இருந்த பணியாளர்கள் இந்த மிட்டாய்களை நாங்கள் தயாரிப்பதில்லை என்றும் இங்கு வாங்கினால் அப்படித்தான் இருக்கும் எனக் கூறியதுடன், சந்தனபிரபு விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சந்தனபிரபு நிலக்கோட்டை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கடையில் உள்ள அனைத்து கடலை மிட்டாய்களையும் பறிமுதல் செய்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், குழந்தைகள் ஆசை ஆசையாகச் சாப்பிடும் கடலை மிட்டய்கே இந்த நிலைமை என்றால் மற்ற உணவுப் பொருள்களின் நிலை என்னவாக இருக்கும்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் புகார்கள் வந்தால் மட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளாமல் மாவட்டம் தோறும் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டு உணவுப் பொருள்களின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.