தஞ்சை பெரிய கோயில் கருவறையில் சிவபுராணம் பாடி அசத்திய குழந்தைகள்!
Published : Mar 2, 2024, 3:07 PM IST
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் பெருவுடையார் சன்னதியில் 12 வயது சிறுமியும், 6 வயது சிறுவனும் கணீர் குரலில், தூய தமிழ் உச்சரிப்பில் மனம் உருகி மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்டனர்.
தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளி இருக்கும் பெருவுடையாரை வழிபட தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று பெருவுடையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் வந்த பக்தர்கள் கூட்டத்தில், இரண்டு குழந்தைகள் சிவபுராணம் பாடியவாறு வந்தனர்.
பெருவுடையார் சன்னதி முன்பு சென்ற இரண்டு குழந்தைகளும் கைகூப்பி, மனம் உருகி நமச்சிவாய வாழ்க, நாதந்தாழ் வாழ்க என மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை ஏற்ற இறக்கத்துடன், தூய தமிழ் உச்சரிப்பில் பாடி பெருவுடையாரை வழிபட்டனர். இந்த குழந்தைகள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ருக்மணி (12) மற்றும் அவரது சகோதரன் தேவசேனாபதி (6) ஆவர். கோயிலுக்கு வந்த பக்தர்கள், குழந்தைகள் பாடிய பாடலை கேட்டு பாராட்டிச் சென்றனர்.