தேனியில் பொம்மையசாமி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி கோலாகலம்!
Published : Feb 27, 2024, 4:04 PM IST
தேனி: தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பொம்மையசாமி திருக்கோயில் புதுப்பிக்கும் பணிகள் முடிவு பெற்றதையடுத்து கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, திருக்கோயில் மூலவர் கருப்பசாமிக்கு வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து தீபாராதனை காட்டி பொதுமக்கள் வழிபட்டனர். பின்னர், கிராம மக்கள் கோயில் குல வழக்கப்படி ராஜகம்பளம் நாயக்கர் சமுதாயத்தின் பாரம்பரியத் தேவராட்டம், உருமி மேளம் மற்றும் கும்மியடி திருவிழா தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கொழுக்கட்டை தம்பிரான் உற்சவர் திருவிழா என்ற பெயரில் 'எருது விடும் விழா' நடைபெற்றது. தேனி, திண்டுக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட காளைகள் இதில் கலந்து கொண்டன.
இந்தக் கோயில் அருகே எல்லைக்கோடு அமைக்கப்பட்டு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தை முதலாவதாகக் கடக்கும் காளைகளுக்குக் கோயில் குல வழக்கப்படி எலுமிச்சைப் பழம், வாழைப்பழம் வழங்கி பரிவட்டம் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயில் திருவிழாவைக் காண ஏராளமான பொதுமக்கள் வந்தனர்.