கூடைப்பந்து விளையாடி வாக்கு சேகரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்! - lok sabha election 2024
Published : Apr 14, 2024, 5:01 PM IST
தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், கட்சி வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தஞ்சை தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது உள் விளையாட்டு அரங்கில் இறகுப்பந்து ஆடிக் கொண்டிருந்த விளையாட்டு வீரர்களிடம் வாக்கு சேகரித்து, முன்னாள் அமைச்சர் காமராஜ், எல்.கே.சுதீஷ் ஆகியோர் இறகுப்பந்து ஆட்டம் விளையாடினர். அதேபோல் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்கு சேகரித்து, எல்.கே.சுதீஷ், வேட்பாளர் சிவநேசன் இரண்டு பேரும் கூடைப்பந்து ஆடினர். மேலும், எல்.கே.சுதீஷ் புல்லட் ஓட்டியும், சாலை ஓர கடையில் காமராஜ், சுதீஷ் மற்றும் நிர்வாகிகளும் காபி அருந்தி விட்டு வாக்கு கேட்கப் புறப்பட்டுச் சென்றனர், இந்த வாக்கு சேகரிப்பின் போது அதிமுக நிர்வாகிகள் சரவணன், திருஞானம், காந்தி, தேமுதிக நிர்வாகிகள் செங்குட்டுவன், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.