ETV Bharat / state

ஜெயக்குமார் வழக்கில் களமிறங்கும் 'எக்ஸ்பர்ட்'... யார் இந்த சாகுல் ஹமீது? - jayakumar death case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 5:38 PM IST

inspector shahul hameed: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரிகளில் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது குறித்து சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன.

சாகுல் ஹமீது மற்றும் நெல்லை ஜெயக்குமார் புகைப்படம்
சாகுல் ஹமீது மற்றும் நெல்லை ஜெயக்குமார் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட இன்றுடன் 13 நாட்கள் ஆகின்றன. ஒரு பிரதான கட்சியின் முக்கிய நிர்வாகி கோரமான நிலையில் இறந்த கிடந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை பொறுத்தவரை, ஜெயக்குமார் எழுதியதாக சொல்லப்படும் கடிதங்களில் குறிப்பிட்டிருந்த சொந்த கட்சியினர் மட்டுமல்லாமல், ஜெயக்குமாரின் குடும்பத்தார் அனைவரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடந்துள்ளது. இருப்பினும், ஜெயக்குமாரின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா என்ற முடிவுக்கு போலீசாரால் இதுவரை வரமுடியவில்லை.

இந்த வழக்கு தற்போது வரை சந்தேகம் மரணமாக மட்டும்தான் பதிவாகி விசாரணையானது நடந்து வருவதாக சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தென்மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கை விசாரிப்பதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஐஜி கண்ணன் கூறினார்.

கடிதத்தில் சபாநாயகர் பெயர்

மேலும், இன்னும் ஒரு வாரத்தில் ஜெயக்குமாரின் உடற்கூறாய்வு, டிஎன்ஏ அறிக்கைகள் வந்துவிடும் என்றும் அதற்கு பிறகே இவ்வழக்கு முன்னேற்றம் அடையும் எனவும் அவர் தெரிவித்தார். ஐஜி கண்ணனின் பேட்டியில் முக்கிய தகவலாக பார்க்கப்படுவது சபாநாயகர் அப்பாவு பெயர் இந்த வழக்கில் இடம்பெற்றிருப்பதுதான். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக வெளியான முதல் கடிதத்தில் சபாநாயகர் அப்பாவு பெயரும் இடம்பெற்றுள்ளது. தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று ஐஜி கண்ணன் கூறினார்.

இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது

இந்த நிலையில், ஏற்கனவே ஜெயக்குமார் வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வரும் சூழலில், இவ்ழக்கு விசாரணைக்கா, கூடுதலாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியானது. குறிப்பாக இந்த அதிகாரிகளில் சாகுல் ஹமீது என்பவர் புலனாய்வு எக்ஸ்பர்ட் என்கின்றனர். காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர் தற்போது தூத்துக்குடி முறப்பநாடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கண்ணப்பன் மற்றும் தற்போதைய ஐஜி அஸ்ராகார்க் ஆகியோர் நெல்லை எஸ்பியாக இருந்தபோது சாகுல் ஹமீது எஸ்பி தனிப்பிரிவில் பணியாற்றி இருக்கிறார். கண்ணப்பன் மற்றும் அஸ்ராகார்க் ஆகிய துடிப்பான அதிகாரிகளின் கீழ் பணிபுரிந்த சாகுல் ஹமீது பல்வேறு சிக்கலான வழக்குகளை கையாண்டுள்ளார்.

கொலை அம்பலம்

அஸ்ராகார்க் நெல்லை எஸ்பியாக இருந்தபோது இவருக்குகீழ் பணியாற்றிய போலீசார் பத்து ஆண்டுகளுக்கு மேல் தீர்வு காணாமல் இருந்த வழக்குகளை தீர்த்துள்ளனர். அப்போது சாகுல் ஹமீது அந்த தனிப்பிரிவில் இருந்துள்ளார். மேலும் தற்கொலை வழக்கு என்று முடிவுக்கு வரப்பட்ட பல வழக்குகளையே மீண்டும் அலசி ஆராய்ந்து அதை கொலை வழக்கு என்பதை சாகுல் ஹமீது தனது புலனாய்வு மூலம் நிரூபித்துள்ளார்.

குறிப்பாக ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் கடையநல்லூரில், பள்ளிவாசல் ஒன்றில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த போது பெரும் மதக் கலவரம் ஏற்பட இருந்ததாக கூறப்பட்டது. சாகுல் ஹமீது நடத்திய விசாரணையில், பள்ளிவாசல் நிர்வாகிகளே அவரை கொலை செய்துவிட்டு மத கலவரத்தை தூண்ட முயற்சித்தது விசாரணையில் அமபலமானது.

இதுபோன்று பல்வேறு புலனாய்வு வழக்குகளை திறம்பட கையாண்ட சாகுல் ஹமீது, தற்போது காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் வழக்கில் விசாரணை அதிகாரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல, அவருடன் முன்னாள் நெல்லை மாவட்ட இன்ஸ்பெக்டர் சந்திரசேகரும் கூடுதலாக தனிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளார். சந்திரசேகர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குண்டாசில் இருந்து தப்ப முடியுமா சவுக்கு சங்கர்? -சட்டம் சொல்வது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.