கோயம்புத்தூர்: கோவை சரவணவம்பட்டி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, திட்டங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 780 கோடி ரூபாய் மதிப்புமிக்க குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் (பில்லூர் III) 362.20 கோடி ரூபாய் மதிப்பில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அன்னூர், சூலூர், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், 39.11 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. கோயம்புத்தூர் முழுமை திட்டம் தொடர்பான இணையதள முகவரி மற்றும் க்யூஆர் கோடு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அனைவரது முகத்திலும் பசி தெரிகிறது. எனக்கும் பசிக்கிறது. பசிக்காக உணவு அருந்தினால் உணவு மடும் பத்தாது, குடிநீரும் மிக முக்கியம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
நான் அடிக்கடி செல்கின்ற ஊர் என்றால், அது கோவைதான். கருணாநிதி வாழ்ந்த ஊரும் இதுதான். மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்களைத்தான் எனது வீட்டிலும், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிலும் அதிகமாக உபயோகிக்கிறோம். முதலமைச்சர் தந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் கோவையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்கப்பட உள்ளது.
கருணாநிதியின் தொலைநோக்கு பார்வைதான் இதற்கு காரணம். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்காக வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு வேகமாக நகரமயம் ஆகி வருகிறது. எனவே, அதற்கு ஏற்றவாறு உட்கட்டமைப்புகளை அமைக்கின்ற கடமை அரசிற்கு உள்ளது. அதனை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், கோவையில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் கிடைக்க வேண்டும். இந்தியாவில் இதர நகரங்களுக்கும், தமிழ்நாடு நகரங்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன.
தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை, திருச்சி, சேலம் என அனைத்து நகரங்களும் வளர்ந்து வருகிறது. தொழில், கல்வி, சுகாதாரம், நகர உட்கட்டமைப்பு என்ற அனைத்திலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் தமிழ்நாடு ஒரு மாடல் அரசாக திகழ்ந்து வருகிறது. இதனைத்தான் நாம் திராவிட மாடல் என்று அழைத்து வருகிறோம்.
நம்முடைய திட்டங்களை பார்ப்பதற்காக, இதர மாநிலங்களில் இருந்து அரசு அலுவலர்கள் வந்து செல்கின்றனர். அதனை, அவர்களது மாநிலத்திலும் செயல்படுத்தி வருகின்றனர். கடந்த ஐந்து வருடங்களில் மட்டும், மத்திய அரசிற்கு நாம் கொடுத்து இருக்கக் கூடிய வரி 6 லட்சம் கோடி ரூபாய். ஆனால், அவர்கள் நமக்கு வெறும் 1 லட்சத்து 58 ஆயிரம் கோடிதான் திருப்பித் தருகிறார்கள். அதாவது, 1 ரூபாய் கொடுத்தால் 29 காசுகள் மட்டுமே திருப்பி தரப்படுகிறது.
அடுத்த வரவிருக்கும் இரண்டு மாதங்களும் மிக மிக முக்கியமான காலம் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கடந்த முறை சிறு சிறு தவறுகள் நடந்திருந்தாலும், அதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நீங்கள்தான் எங்கள் அரசின் தூதுவர்கள், முதலமைச்சரின் முகம்" என்று உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், தமிழ்நாட்டில் செஸ் மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி, எம்பி ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் 2024; வார் ரூம் அமைத்தது திமுக!