ETV Bharat / state

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 4:21 PM IST

DMK and CPI(M) seat sharing: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

dmk and cpm seat sharing
dmk and cpm seat sharing

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (பிப்.29) நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுக்கியது போன்று, திமுக கூட்டணியில் இம்முறையும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “இந்தியா முழுவதும் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளில், கடந்த முறை ஒதுக்கிய இரண்டு தொகுதிகளும், அதனுடன் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தோம்.

ஏற்கனவே பல கட்சிகள் கூட்டணியில் இருக்கும் நிலையில், மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்கிற நிலையில், எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதால், இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டோம். மேலும், திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளை வற்புறுத்திக் கேட்டுள்ளோம். ஒரு தொகுதியில் மட்டும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருவதால், அது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். கமல்ஹாசன் மற்றும் இன்னும் சிலர் புதியதாக கூட்டணிக்கு வருவதாகக் கூறுகிறார்கள். அதனால் எண்ணிக்கையை அதிகரித்துக் கேட்க முடியவில்லை" என தெரிவித்தார்.

இதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தற்போது வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஐஎம்,சிபிஐ ஆகிய இரண்டு கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அழைப்பு விடுக்கும் திமுக.. பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுக்கும் விசிக.. அதிருப்திக்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.